தெகிடி

Thegidi | source: onlykollywod.com
Thegidi | source: onlykollywod.com

தெகிடி.

விமர்சனங்கள் படிக்கவில்லை. கதை தெரியாது. சும்மா போய் உட்கார்ந்தேன். இனிய ஆச்சர்யம்.

சுபா / ராஜேஷ்குமார் மாதநாவல் டைப்பிலே துப்பறியும் கதை. ஆனால் neat execution. நாயகன் , நாயகி சந்திக்கிற தருணங்கள், அவங்களுக்குள்ளான உரையாடல்கள் எல்லாம், close to reality என்பார்களே அந்த ரகம். “என்னடா காமிக்கிறீங்க எங்க கிராமங்களை?” ன்னு பாரதிராசா பொங்கிப் புறப்பட்டாரே முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மாதிரி உள்ளதை உள்ளபடிச் சொல்வோம்னு சுவாரசியமான கதைகளோட நம்ம அக்கம் பக்கம் வீடுகளிலேயிருந்தெல்லாம் பசங்க கிளம்பி வராய்ங்க.. சந்தோஷமாக இருக்கிறது.

டைட்டிலின் வரைகலை தொடங்கி, இறுதியிலே ட்விஸ்ட்டுடன் கூடிய open ended climax வரை கொஞ்சம் கூடத் தொய்வில்லாமல் செமை வேகம்.

ஆனாலும் படத்திலே என்னமோ இடிக்கிறது. என்ன என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன்.

Casting.

போன வாரம் தொலைக்காட்சியிலே, முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸின் தெலுங்கு ரமணாவைப் பார்த்தேன். ஒரு மொழியில பார்த்த படத்தை , இன்னொரு மொழியில பார்க்கும் போது யார் யார் எந்த எந்த ரோலை செஞ்சிருப்பாங்கன்னு யூகிக்கிற விளையாட்டு எனக்குப் புடிக்கும். யூகிசேது ரோலிலே யார்னு ஆவலோட காத்திருந்தேன்.

பிரகாஷ்ராஜ்.

அடச்சே…ன்னு ஆயிடுச்சு.

தமிழ்ல அந்த முக்கியமான கான்ஸ்டபிள் காரக்டரை செஞ்ச யூகிசேதுவுக்கு ஒரு விசேஷத் தன்மை இருக்கு. அதாவது, அது வெறுமனே காமெடி கான்ஸ்டெபிள் ரோல்தான்னாலும், ஜனங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. இல்லை, அவர்தான் க்ளைமாக்ஸ்ல கொலைகாரனை புத்திசாலித்தனமா யோசிச்சுக் கண்டுபுடிக்கிற காரக்டர்னாலும் கேள்வி கேக்காம ஜனங்க நம்புவாங்க. ஏன்னா அவரோட இமேஜ் அந்த மாதிரி. ( சின்னி ஜெயந்து, சார்லி ல்லாம் செட் ஆகமாட்டாங்க)

ஆனா தெலுங்குல, சிரஞ்சீவிக்கு சமமான வில்லனா பல படங்களிலே நடிச்ச பிரகாஷ்ராஜை, ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ரோலிலே காமிக்கும் ஆரம்பத்துலயே அந்தக் காரக்டர் மேல ஒரு எதிர்பார்ப்பு வந்துரும். ( அப்ப ஏதோ மேட்டர் இருக்கு..ன்னு அலர்ட் ஆய்டுவாங்க, சஸ்பென்ஸ் எலிமெண்ட் காலி. ) இது இயக்குனருக்கு பேஜாரான சூழல். ஏன்னா எதிர்பார்த்தது போலவே நடந்தாலும், ரசிகமகாஜனமானது, ” நாங்கதான் அப்பவே சொன்னோம்ல.. பிரகாஷ்ராஜ் தான் மெய்ன் கேரக்டருன்னு’ சொல்லும். அப்படி நடக்கலைன்னாலும், ” இந்த டொச்சு கேரக்டருக்கு என்ன hair க்கு பிரகாஷ்ராஜ் போல ஒரு பெரிய ஏக்டரைப் போட்டே’ ன்னு சட்டகாலரைப் புடிக்கும்.

தமிழ்ல், ஆரம்பத்தில் லூசு போல அறிமுகமாகி, படிப்படியாக பில்ட் அப் கொடுத்து, இறுதியிலே புத்திசாலித்தனம் நிறைந்த ஒரு காரக்டராக ஆகிறதுல இருக்கிற எதிர்பாராத தன்மையும், அந்த அனுபவமும் தெலுங்கில பாக்கிறவங்களுக்குக் கிடைச்சிருக்குமான்னு சந்தேகம்தான்.

ஆக எல்லா பாத்திரங்களுக்கும் பிரபல நடிகர்கள் போட்டுவிட்டால் படம் ‘பிரம்மாண்டமா’ வேணா இருக்கலாம். ஆனால் ‘சரியா’ இருக்கும்னு சொல்லமுடியாது.

தெகிடியும் இந்தத் தவறைச் செய்திருக்கிறது. ஆனா ரிவர்ஸில்.

தெகிடி மாதிரி ஒரு சுவாரசியமான திரில்லர் படத்திலே எனக்கு ‘இடிச்சது’ இந்த casting தான். படத்தோட முக்கியமான காரக்டர்களான புரபசர், அந்தக் குறுந்தாடி மேனேஜர், நண்பன் மூணுபேரும் அந்தப் பாத்திரத்தின் கனத்தைத் தாங்கச் சக்தி இல்லாதவர்கள். இவங்க மேல நாம நம்ம நேரத்தை invest பண்ணனுமான்னு கடைசி வரைக்கும் சந்தேகம் தான். அதுவும் அந்த நண்பன் காரக்டருக்கு புதுமுகம் தான் போட்டாகணும்னு இருந்தாலும் கூட நல்லா நடிக்கக் கூடிய ஒருத்தரைப் போட்ருக்கலாம். ரெஜிஸ்டரே ஆகலை. புரஃபசர், கிளைமாக்ஸ்ல பேசற நீளமான அந்த ‘எமோசனல் டைலாகு’ சுத்தமா ஒட்டவே இல்லை. ஒரு நல்ல பழக்கமான ஒரு குணச்சித்திர நடிகரைப் போட்ருந்தா அந்தக் காட்சி, கேரக்டர் ரெண்டும் அப்படியே எலிவேட் ஆயிருக்கும்.

பார்த்துட்டு வந்து, ரொம்ப நேரமா மனசுக்குள்ள அசை போடறேன் ஆனா, மேல சொன்ன அந்த மூணு முக்கியமான காரக்டர்களின் பெயரோ, முகமோ சுத்தமா ஞாபகத்துக்கே வரலை. தெகிடி நல்ல படம் என்பதைத் தாண்டி, படத்தைப் பற்றிப் பேச வேற எந்தப் பிடிமானமும் இல்லைங்கறதுதான் படத்தின் ஆகப் பெரிய குறை.

நாலு வரி நோட்டு – ஒரு பார்வை

திரைப்படக்கலை என்பது, பல திறமைகள், வித்தைகள், நுட்பங்களின் கூட்டுக்கலவை.

chokkan இந்தியத் / தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, இதன் பல நுட்பங்களுக்கு சம்பிரதாயமான முன்னோடிகள் கிடையாது. உதாரணமாக நம் திரைப்படங்களின் பிரதான அம்சமான dance & stunt choreography ஆனது பல பாரம்பரியமான கலைகளில் இருந்து இரவல் பெற்று பின்னர் அவை தனிக்கலைகளாகச் சுயாதீனம் பெற்றிருக்கின்றன ( இல்லை என்று வரிந்து கட்டும் ப்யூரிஸ்ட்டுகளை பின்னர் கவனித்துக் கொள்ளலாம்). நடனத்தில் வழுவூர் ராமய்யா பிள்ளை, ஹீராலால் தொடங்கி பிரபுதேவா, தினேஷ் மாஸ்டர் ( 2011 ஆண்டு தேசிய விருது பெற்றவர்) வரையிலும் ஸ்டண்ட்டில் ஷ்யாம்சுந்தர் தொடக்கம் பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் வரையில் பலரும் இப்படித் தனித்துவம் பெற்ற கலைஞர்கள்தாம்.

தமிழ்த் திரைப்படக்கலையின் இந்த வளைந்து கொடுக்கும் தன்மையும், புதியனவற்றை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் தான், இக்கலையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

இதிலே திரைப்படப் பாடல் எழுதும் திறன் என்பது மேற்சொன்னவற்றில் இருந்து சற்றே வேறுபட்டது.

giraதொடக்கத்தில் தமிழ்த் திரைப்படங்களானது, புராணங்களையும் கர்ண பரம்பரைக்கதைகளையும் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டன. எந்தச் சந்தர்ப்பத்தில் எந்தப் பாடல் என்ன பாணியில் இருக்கவேண்டும் என்பதற்கு, அந்தப் புராணத்தின் / கதையின் மூல வடிவம், ஒரு வழிகாட்டி போல அமையும். உதாரணமாக, கர்ணன் படத்தின், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற பாடலுக்கான situation ஒரிஜினல் மகாபாரதக் கதையிலே உண்டு ( என்று நினைக்கிறேன்). அப்பாடலை எழுதிய கண்ணதாசனுக்கு சங்க இலக்கியப் பரிச்சயமும் இருந்ததால், சரியான ரெஃபரன்ஸுடன், கச்சிதமாக இரண்டையும் ( பாடல் சூழல் / மூலக்கதை) map செய்து, தமிழ் சினிமாவின் மெலோட்ராமாவுக்கு ஏற்ப ” செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி…” என்று சிக்சர் அடித்து, கர்ணனின் பாத்திரத்துக்கான நியாயத்தைச் சாரமாகப் பிழிந்து வைத்து விடுகிறார்.

கண்ணதாசன் மட்டுமல்ல, கவித்திறனும், இலக்கியப் பயிற்சியும் இருக்கப் பெற்ற பல திரைப்படப் பாடலாசிரியர்கள் பட்டையைக் கிளப்பினார்கள்.

ஆனால் காலம் மாறிவிட்டது.

அதாவது இலக்கியப் பரிச்சயமும், இலக்கணப் பயிற்சியும் கொண்ட கவிஞர்கள் திரைப்பாடல்கள் எழுதிய வரையிலும் அப்பாடல்களை அதன் திரைப்படத் தொடர்பு / இசை தாண்டியும் அனுபவித்து ரசிக்க, ஆராய்ந்து மகிழ, பிரித்து மேயச் சில காரணங்கள் இருந்தன. நாளாவட்டத்தில் அது குறைந்து, இந்த ‘ஒய் திஸ் கொலவெறி’ காலத்திலும் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். திரைப்படங்களிலே பாடல் இடம் பெறவேண்டியதற்கான காரண காரியங்களிலே அதிரடியாக மாற்றங்கள் ஏற்படும் பொழுது ( ஹீரோயினை, நம்ம ஹீரோ,  பஸ்ல வெச்சு லிப்டுலிப்  கிஸ் அடிக்கற இந்த இடத்துல சட்டுன்னு கட் பண்ணி ஒரு ஃபாரீன் சாங் , அப்படியே இண்டர்வல் ப்ளாக்குக்கு அப்பறம் மாங்கா தேங்கா எல்லாம் போட்டு ஒரு குத்துப் பாட்டு …. அப்படியே அள்ளிக்கும்) , மானாங்காணியாக எதையோ எழுதி வரிகளை இசைக்குள் மறைத்து ஒப்பேற்றி வரும் காலட்டத்தில் திரைப்படப் பாடல்களிலே அர்த்தமாவது இலக்கியமாவது என்று நினைக்கிறோம் இல்லையா? ]

அது தவறு என்கிறார்கள், சொக்கன், மோகனகிருஷ்ணன், & ஜிராகவன் ஆகிய மூவரும்.

mohanakirshnanஇவர்கள், நாலுவரி நோட்டு என்ற ஒரு நூல் வரிசை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். மூவரும் ஆளுக்கொரு பாகமாக எழுதியிருக்கிறார்கள்.

அதாவது, தம் ரசனையின் அடிப்படையில் சில பாடல்களைத்  தெரிவு செய்து,  அப்பாடல்களின் வரிகளை ஆராய்ந்து அதன் reference ஐ புராணங்களிலும், சங்க இலக்கியத்திலும், பழங்கதைகளிலும் பழமொழிகளிலும், வட்டார வழக்குகளிலும் அடையாளம் கண்டு, அந்தத் தேடலைச் சிறு குறிப்புகள் / கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்துவதுதான் மூவர் குழுவின் திட்டம்.

அதில் தெரிவு செய்யப்பட்ட குறிப்புகள் நூல் தொகுப்புகள் ஆகியிருக்கின்றன. ( இதிலே இன்னொரு சிறப்பு, இந்த நூல் வரிசை, ஜெயமோகன் ஃபார்முலாவைப் பின் பற்றி வந்திருக்கிறது. அதாவது முதலிலே இலவசமாக இணையத்திலும், பின்னர் அச்சிலும் கொண்டு வரும் ஹிட் ஃபார்முலா)

இதை, ஒரு நூல் வடிவத்தில் வந்திருக்கும் ஒரு project என்றே சொல்லுவேன்.

ஒரு பாடலை இசை ரசிகர்கள் எப்படி, அதன் நுட்பங்களையும் கலை அம்சங்களையும் நட்டு போல்ட்டுத் தொடக்கம் அனைத்தையும் பிரித்துப் போட்டு ஆராய்கிறார்களோ அதே போல நாலுவரி நோட்டு பாடல்வரிகளை அணுகியிருக்கிறது. எழுதிய இம்மூவரின் இலக்கிய / இலக்கணப் பயிற்சியும் இம்முயற்சிக்குக் கைகொடுத்து, ஒரு வேறுபட்ட ஆனால் authentic ஆன வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

உதாரணமாக சின்னக் கவுண்டரின் ஈவ் டீசிங் பாட்டிலே ஒரு வரி, ” வீணா வரிஞ்சு கட்டி வம்பிழுத்ததாலே,,’ என்று வருகிற வரியில் வரும் ‘வரிஞ்சு கட்டி’ என்கிற பதத்துக்கான உண்மையான அர்த்தத்தை ஆராய்கிறது சொக்கனின் ஒரு குறுங்கட்டுரை. நிலவு தென்படும் பாடல்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான கட்டுரை எழுதி, அதை இறுதியில் அருணகிரிநாதரின் கந்தரகராதியில் கொண்டு போய் முடிச்சுப் போடுகிறார் ஜிரா. ‘அடியே நாளையேனும் மறக்காமல் வா’ என்கிற பாலகுமாரனின் பிரபல கவிதைக்கும் சோளம் வெதைக்கையிலே பாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்கிறார் மோகனகிருஷ்ணன்.

இது போன்ற பல சுவாரசியமான interpretations தான் நூல் முழுவதும்.

இதை வாசிக்கும் பொழுது நமக்குக் கிடைக்கும் இன்பத்தை விடவும் இந்தத் திட்டத்துக்கான பாடல்களைத் தெரிவு செய்ததும், ஆராய்ச்சியில் இறங்கியதும் அவர்கள் மூவருக்கும் அதிகமான இன்பத்தைத் தந்திருக்க்கும் என்று நினைக்கிறேன். அது குறித்தும் முன்னுரையில் ஆசிரியர்கள் கோடி காட்டியிருக்கலாம். இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கும்.

இது இணையத்தில் வெளியான பொழுதே வாசித்திருக்கிறேன். இந்தத் திட்டத்துக்காகவே ஒரு புதிய பதிப்பகத்தைத் தொடங்கி இந்த நூல் வரிசையை வெளியிட்டிருக்கிறார்கள் எனும் பொழுது, இது எவ்வளவு சீரியாசன விஷயம் என்று எனக்கு உறைக்கிறது. நன்றாக விற்பனை ஆகக் கூடிய புத்தகங்களை வெளியிட்டுக் காசு பார்க்கும் சூழலிலே, தனிப்பட்ட ஆர்வத்திலும், ஈடுபாட்டிலும், இம்மாதிரி, குறிப்பிட்ட ரசனைக்காரர்களுக்கென்று நூலைக் கொண்டு வந்திருக்கும் முயற்சியை வாழ்த்துகிறேன்.

தமிழ்ச் சினிமா பாடல் ரசனை கொண்டவர்கள் தங்கள் collectors edition இலே அவசியம் வைத்துக் கொள்ளவேண்டிய நூல்கள் இவை மூன்றும்.

நாலுவரி நோட்டு (1,2,3) | சொக்கன், ஜிரா, மோகனகிருஷ்ணன் | முன்னேர் பதிப்பகம் | Rs.125 each.

நூலை இங்கே வாங்கவும்.

யார் , எவர்

எட்டத்தில் இருந்து பார்த்து, படிச்சுக் கேள்விப்பட்ட பலரை, ஃபேஸ்புக்கிலே கிட்டக்க போய்ப் பாத்து, அவங்க நட்பு வட்டம் எப்படி, அவங்க எதையெல்லாம் லைக் பண்றாங்க, எந்த எந்த குரூப்புலல்லாம் இருக்காங்க. அவங்களுக்குள்ள எப்படில்லாம் பேசிக்கறாய்ங்க என்கிறதல்லாம் வெச்சு, கூட்டிக் கழிச்சுப் பார்த்து, அவங்க ‘நெஜமாவே’ யாருன்னு புரிஞ்சுக்கும் போது,

“ஆண்டவா… இவங்களையெல்லாம் வெச்சுப் பாக்கும் போது, நாமல்லாம் எவ்ளோவோ பரவாயில்லை .. ரொம்ப தேங்கஸுப்பா உனக்கு” ன்னு ஒரு ஃபீலிங் வரும் பாருங்க… அந்த திருப்திக்கு ஈடு இணையே கிடையாது….

– வார இறுதியை எதிர்நோக்கிய , வேலையற்ற ஒரு வெள்ளிக்கிழமையின் பிற்பகல் பொழுது.

தமிழ் சினிமாவை உட்ருங்கடா டேய்……

image source : http://dualpath.blogspot.in/
source : http://dualpath.blogspot.in/

சன் டீவியில் திரை மின்னல்கள் என்று ஒரு நிகழ்ச்சி. ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் இருந்து சில காட்சிகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தப் படத்தைப் பலரும் பலவிதமாகக் கலாய்த்துப் பார்த்திருக்கிறேன். சரி என்னதான் இருக்கிறது என்பதற்காக அந்தக் காட்சிகளைப் பார்த்துத் தொலைத்துவிட்டேன். .

கார்த்தியும் சந்தானமும் ரெண்டு மூணு வருஷமா கஷ்டப்பட்டு டிவி சானல் நடத்துகிறார்களாம். ஆனால் டீ குடிக்கக் கூடக் காசு இல்லையாம்.

அதெப்படி எட்டுக்குப் பத்து ரூம்ல ரெண்டு சேர்ல உக்காந்து சேனலை நடத்தறது? இது தெரியாமதான் முர்சொலி பிரதர்சு, ராஜேந்திரன் பிரதர்சு, பச்சமுத்து அன் சன்ஸு எல்லாரும் கோடிக்கணக்கா செலவு செஞ்சு டீவி நடத்தறாங்களா? அடக் கெரகமே.. அப்பறம் ஹீரோ கோஷ்டிக்கு அஞ்சு லட்ச ரூபாய் விளம்பரம் எடுத்தா பிரச்சனை தீர்ந்துடுமாம்..அந்த அஞ்சு லட்ச ரூபா வெளம்பரத்தையும் அஞ்சாயிரம் ரூபால எடுத்துடுவாங்களாம்…அதுக்காக மாடல் தேடி அலைகிறார்களாம்… அதுக்கப்பறம் என்னனு தெரியலை.. நிகழ்ச்சி முடிஞ்சுருச்சு..

ஆடியன்ஸு மூளையை இன்ஸல்ட் செய்யறதுக்கும் ஒரு அளவு வேணாமாடே..

“சார், டிவி சானல்க்கு பதிலா, சின்ன விளம்பர ஏஜென்சின்னு மாத்திக்கலாம் சார், கொஞ்சம் நம்பற மாதிரி இருக்கும்” னு ஸ்டோரி டிஸ்கஷன்ல ஒரு பக்கி கூடவா சொல்லியிருக்காது?

இந்தப் படத்தை யோசித்த, எழுதிய, பணம் போட்ட, நடித்த, உருவாக்கிய அத்தனை பிக்காலிப் பயல்களுக்கும் ஒர் பயங்கரமான எச்சரிக்கை.

உங்க அத்தனை பேர் கையயும் காலா நெனச்சுக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்….. தமிழ் சினிமாவை உட்ருங்கடா டேய்……