Prakash’s Chronicle 2.0

aayirathil oruvan

ஜனவரி 16, 2010 · 18 மறுமொழிகள்

இது என்னோட point of view.

இது விமர்சனமில்லை. பார்த்ததில் இருந்து நான் புரிந்து கொண்டதை, எழுதுகிறேன்.

*******

ஆயிரத்தில் ஒருவன்

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் பேசும் ஒரு இனத்தினர் ( சோழர்கள்) , அதே தமிழ் பேசும் ஒரு மற்றொரு இனத்தினரால் ( பாண்டியர்கள்) நாட்டை விட்டுத் துரத்தப் படுகிறார்கள். சோழர்கள், அதற்குப் பழிவாங்க, பாண்டியர்களின் குலப்பெருமையான ஒரு ‘சிலயைக்’ கவர்ந்து கொண்டு அருகில் உள்ள ஒரு தீவினிலே ஒரு மறைவான இடத்தில் தஞ்சம் அடைகிறார்கள், என்றாவது ஒரு நாள் தாங்கள் இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் என்கிற நம்பிக்கையில்.

உண்மையில் , அவர்கள் ஒரு அமைதித் தூதுவனுக்காகக் காத்திருக்கிறார்கள்.

அப்படிச் சில நூற்றாண்டுகளாகக் காத்திருக்கும் சோழர்களின் இறுதி வாரிசு ( பார்த்திபன்), தீவிரவாதத் தன்மை கொண்ட தலைவன்.மூர்க்கன், அதே சமயம் தங்கள் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எந்த எல்லைக்கும் சென்று எதையும் செய்யத் தயங்காதவன். நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், நாகரீகம் எட்டிப் பாராத பிரதேசத்தைக் ராணுவத்துக்கு நிகரான கட்டுப்பாட்டுடன் கட்டிக் காப்பாற்றி வருகிறான். ‘இனி எப்ப எங்களுக்கு விடிவு காலம்?’ என்று கேள்வி கேட்டுப் புரட்சி செய்யும் தன் மக்களையே அழித்துக் கொண்டு, தன் நோக்கம் நிறைவேற, ‘புலி’ முத்திரை பொறித்த தூதுவனுக்காகக் காத்திருக்கிறார்.

கேள்வி கேட்டு அழிந்த மக்களைத் தவிர்த்து, மக்கள் அனைவரும் அவனுக்கு விசுவாசமானவர்கள். தலைவனுக்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளவும் தயங்காதவர்கள்.இவர்கள் பேசும் தமிழானது, மிக வினோதமானது ஆனால் அதுதான் கலப்படமில்லாத சுத்தமான தமிழ்.

தலைவனுக்கு ஒரு மதியூகி உண்டு. வயதானவர், நோய்வாய்ப்பட்டவர். ஆனால்,அவருடைய ஆலோசனை இன்றி தலைவன் செயல்படுவதில்லை. விரைவில், ஒரு தூதுவன் மூலமாக விடிவு வரும் என்று நம்பிக்கை அளித்துக் கொண்டு வருபவர் அவரே.

ஆனால், இவ்வளவு காலத்துக்குப் பின்னும், பாண்டியர்கள், சோழர்கள் மீதான விரோதத்தை மறக்காமல் மனதில் வைத்து வஞ்சம் பாராட்டுகிறார்கள். பாண்டியர்களின் உண்மையான நோக்கம், சோழர்கள் களவாடிக் கொண்டு போன தங்கள் குலப் பெருமையை மீட்பதே ஆகும். ஆனால், அவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லாமல், அவர்களுக்கு உதவி செய்யும் தூதுவன் போர்வையில் சோழர்களின் இருப்பிடத்தைத் தேடிப் புறப்படுகிறார்கள்.இந்தக் குழுவுக்குத் தலைமை ஒரு பெண் ( ரீமா சென்) . அப்படி முன்னின்று செல்வதற்கு காரணம், அவர், பாண்டியர்களின் நேரடி வாரிசு. இந்தப் பயணத்துக்கு என்று தனியான நோக்கமும் அவருக்கு உண்டு. சிறுவயதிலிருந்தே, இந்த நோக்கத்தை மனதில் வைத்து வளர்க்கப்பட்டவர். இந்தக் குழுவுக்குத் துணையாக ராணுவப்படையும் உண்டு.

ஒளிந்து வாழும் சோழர்களைப் போல அல்லாமல், பாண்டியர்கள், மனதிலே பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டிருந்தாலும், தோற்றத்திலுல் நடை உடை பாவனைகளிலும் நவநாகரீகர்கள். அவர்கள் ராணுவப்படைக்கு நவீன படைக்கலன்கள் உண்டு. அவர்களின் அந்தத் தேடுதல் பயணம், மிகவும் சிக்கலானது, கடுமையானதும், கண நேரத்தில் உயிரைப் பறிக்கும் அபாயம் நிறைந்ததும் ஆகும். ஆனால், அக்குழு அந்தத் தடைகளைனைதையும் தாண்டி, சோழர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்துவிடுகிறது, பாண்டியர்கள் குழு.

குழுவின், தலைமைப் பெண், தன் முதுகில் புலிமுத்திரையை வரைந்து கொண்டு, சோழர்களுடைய கூட்டத்தில் ஊடுருவிகிறார். ஆனால், சோழர் தலைவனுடைய வலதுகரமான அந்த முதியவருக்கு, இதிலே சின்ன நெருடல் உண்டு. பற்பல தந்திர உபாயங்கள் செய்து, அந்தப் பெண், சோழர்களின் நம்பிக்கைக்குப் உரியவராகிறார். சோழர் தலைவனுக்கு நம்பிக்கை ஏற்படும் தருணத்தில், பாண்டியர்களின் கடைசி வாரிசான அப்பெண், தன் சுயரூபத்தைக் காட்டி, ராணுவத்துக்குத் தகவல் சொல்லி, அவர்களை வரவழைக்கிறார்.

இதற்கிடையில், குழுவில் வந்த எடுபிடியாக வந்த இளைஞனுக்கு (கார்த்தி), இந்தக் குழுவின் நிஜமான நோக்கம் புரிந்து, அதனால் சோழர்கள் பால், பரிவும் பிரியமும் ஏற்படுகிறது.

ராணுவத்தை நேரடியாக எதிர் கொள்ள வேண்டிய இக்கட்டானச் சூழலில், பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும் இறுதிப் போர் நடக்கிறது. பாண்டியர்களின் போரை, அப்பெண்ணும், ராணுவ அதிகாரியும் வழி நடத்த, சோழர்களுக்கு உதவியாக கார்த்தி இருக்கிறார்.பாண்டியர்களின் நவீன ரக ஆயுதங்களுடன் போட்டி போட முடியாமல், சோழர்களின் படை, படிப்படியாக அழிகிறது. அந்த இக்கட்டிலும், தலைவனை, கேடயம் போல் வ்யூகம் அமைத்து, அவனுடைய தளபதிகள் காப்பாற்றுகிறார்கள். இறுதியில், சோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஒரு கடலோரத்தில் ஒரு முகாமில் அடைக்கப்ப் படுகிறார்கள்.

எந்த ஒரு வல்லரசின் / வல்லரசு ஆக விரும்பும் நாட்டின் ராணுவமும், போர்க்கைதிகளை எப்படி நடத்துமோ, அதே போல பாண்டியர் படையும் இலக்கில்லாத மூர்க்கத்துடன் சோழர்களைத் துன்புறுத்துகிறது. பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அவர்களை இயக்குவது , பாலியல் இச்சை அல்ல, சித்திரவதை செய்யும் இச்சையே. தலைவனை, மானாவரியாக அடித்துத் துன்புறுத்திக் கொல்கிறார்கள்.

போர் துவங்கும் வரை, சுறுசுறுப்பாக, முனைந்து காரியங்கள் செய்த அப்பெண் வாரிசு. இப்போது எங்கும் தென்படுவதில்லை. கைது செய்யப்பட்ட எஞ்சிய அந்த வீரர்கள், தங்கள் சிதைக்கப்ப்பட்ட தங்கள் தலைவன் உடல் சிக்ககூடாது என்று எண்ணி, ராணுவம் அசந்த நேரத்தில் உடலைத் தூக்கிக் கொண்டு கடலிலே சென்று மறைகிறார்கள்.

இந்த ரணகளத்தில் தப்பித்தவர்கள் இருவரே. ஒரு சிறுவனும், அவ்னைக் காப்பாற்றி மறைவிடத்தில் வைத்திருந்த எடுபிடி இளைஞன் கார்த்தியும்.

அச்சிறுவ்னைத் தோளில் சுமந்து நடக்கும் பொழுது, சோழனின் பயணம் தொடரும் என்று திரைப்படம் முடிகிறது அல்லது துவங்குகிறது.

[ இது நிஜமான சோழர்கள் / பாண்டியர்கள் குறித்து அல்ல என்பது, படம் துவங்குவதற்கு முன்னரே செல்வராகவன் செய்யும் பொறுப்புத்துறப்பு (disclaimer). அப்படியென்றால், இந்தப் படத்தின் பாண்டியர்களும் , சோழர்களும், பழிவாங்கத் துடித்த பெண்வாரிசும், பயணத்த்துக்கு அடிகோலிய அமைச்சரும், பாண்டியர் தலைவனும் யார் என்று தெரிந்து கொள்ள 17-May-2009 / 18- May-2009 தேதியிட்ட நாளிதழ்களைப் தேடிப்பிடித்துப் படிக்கவும்]

→ 18 மறுமொழிகள்பகுப்புகள்: Film Reviews
குறிச்சொற்கள்: ,

சென்னை புத்தகக் காட்சி 2010 – முதல் பார்வை

December 31, 2009 · 20 மறுமொழிகள்

* வாங்குவதற்கு முன்பு, விருப்பப் பட்டியல் போடுவதற்காக இன்று அவசர விஜயம். நாட்டு மக்களுக்கு நற்செய்தி சொல்ல டைம் இல்லை.

* சென்ற ஆண்டு, விகடனும் கிழக்கும் முகப்பிலும், தட்டிகளிலும் செய்திருந்த விளம்பர ஆக்கிரமிப்பை, இந்த ஆண்டு புதிய தலைமுறையும், குமுதமும் பங்கு போட்டுக் கொண்டு விட்டார்கள். முன்னவர்கள், இந்த ஆண்டு, adspend ஐக் குறைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. புத்திசாலித்தனமான முடிவு.

* கிழக்கின் முகிலும் முத்துக்குமாரும் எதிர்பட்டார்கள். முகிலின் சில்லாயிரம் பக்கங்கள் கொண்ட அந்தப்புர நூல் சனியன்றுதான் அரங்குக்கு வருகிறதாம். அத்தனை பக்கம் எழுதியதற்கு ஆள் இன்னேரம் உடம்பு ஓமப்பொடி சைசுக்கு ஆகியிருக்க வேண்டுமே. இல்லை. பூசீனாற்போல இருக்கிறார். சம்சார சாகரத்தில் குதிக்கப் போகிறாரோ என்னமோ? தெரியவில்லை. வாழ்த்துச் சொன்னேன், அதாவது, புத்தகத்துக்கு. பா.ரா பற்றி விசாரித்தேன். அரங்கில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். முதலாளி வந்திருக்கிறாராவென்று தெரியவில்லையாம்.

* பெரும்பாலான அரங்குகளில், சமையல் கலை தொடக்கம் சோதிடம் வரை, வாஸ்து தொடக்கம் இறால் பண்ணை வைப்பதெப்படி வரை நேருவின் சிந்தனைகள் தொடக்கம் சினிமாவின் சீரழிந்த பெண்கள் வரையிலும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள். ஆன்மீகத்தில், கசமுசா வீடியோ புகழ் காஞ்சீபுரம் மேகநாத பாகவதர் தவிர்த்து அனைத்துச் சாமியார்களும் ஷெல்ஃபில் சிரிக்கிறார்கள், பத்து சதவீத தள்ளுபடிச் சிரிப்பு. சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால், விலை சுமார் 10 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

* சிறுதொழில், வர்த்தகம் தொடர்பான புத்தகங்களைத் தேடினேன். அதிகம் இல்லை. இருந்த சிலதும், பட்டுப் பூச்சி வளர்ப்பு, வால்வு ரேடியோ ரிப்பேர் வகையறா தான். thanks to manimekalai prasuram. எட்டுக்கு எட்டடியில் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த லேனாவிடம், பதிலுக்குச் சிரித்து விட்டு நகர்ந்தேன்.

* நான் கணக்கெடுத்த வரை, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி மட்டும் 23 புத்தகங்கள். போட்டோவில் பார்த்த, lazygeek குருவின் சாயலில் ஒன்றிரண்டு அரங்குகளில், பெருமுடாஸ் டிஷர்ட் நபர் எதிர்ப்பட்டார். அவர்தாஅன என்று கேட்கத் தயக்கமாக இருந்தது.

* ‘புதிய தலைமுறை’ விஸ்தாரமான அரங்கு. லேட்ட்ஸ்ட் இதழ்களை மட்டும் மேஜையில் வைத்துச் சந்தா வுக்கு ஆள் பிடித்துக் கொண்டிருந்ததில், அரங்கின் ‘empty’-ness அபசுரமாகத் தெரிகிறது. ஒரு ப்ளாஸ்மா அல்லது எல்சிடி டீவியை சுவரில் மாட்டி என்னமோ படங்காட்டிக் கொண்டிருந்தார்கள். பச்சை சுடிதார் போட்ட அக்கா ஒருவர், உள்ள வாங்க என்றார் புன்சிரிப்புடன். நான் சுஜாதா அல்லது ம.வே.சிவகுமாராக இருந்திருந்தால், ‘எதுக்கு உள்ள’ என்று கேட்டிருப்பேன். வெறும் சாதா என்பதால், ஒரு அசட்டுச் சிரிப்புடன் நகர்ந்துவிட்டேன். அந்தச் சுடிதாரின் உபசாரத்தை உதாசீனம் செய்ய நிறைய ‘வில் பவர்’ தேவை. எனக்கு இருந்தது.

* வானதி அரங்கிலே நுழைந்ததும், ஒரு மாமி, உடல் பொருள் ஆனந்தி எங்கே கிடைக்கும் என்று விற்பனையாளருடன் மல்லுகட்டிக் கொண்டிருந்தார். எதற்கும் இருக்கட்டுமே என்று திரும்பிப் பார்த்து, அவர் என் அம்மா இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு நகர்ந்தேன்.

* உயிர்மை அரங்கிலே, சுஜாதாவின் சூப்பர் ஹிட் நூல்களை ரீசைக்கிள் செய்து குண்டு குண்டு தொகுப்புகளாக அடுக்கி வைத்து பகல் கொள்ளை நடத்திக் கொண்டிருந்தார்கள். மேலும் பல நவீன, பின் நவீன அரசியல் வரலாற்று நூல்கள் , கண்ணைக் கவரும் விதத்தில். வாசலிலே, சாருநிவேதிதா இரண்டு நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். க்ராஸ் செய்யும் பொழுது சாருவிடம் ஸ்காட்ச் வாசம் வரவில்லை. சாதாரண பேண்ட் சட்டை மட்டுமே போட்டிருந்தார். சீமை சாராயமும், ஜீன்ஸும் கூட வாங்க வகையில்லாத அளவுக்கே ராயல்ட்டி தரும் பதிப்பகங்கள் ஒழிக.

* காலச்சுவடு. புத்தகங்கள் வகைப்பாட்டில், இது உயிர்மையின் ஆல்டர் ஈகோ, குறுந்தாடி கண்ணன், வாயிலை மறித்துக் கொண்டு, யாரிடமோ ‘பிசினஸ் லைக்காகப்’ பேசிக் கொண்டு இருந்தார். எச்சூஸ்மீ சொல்லி உள்ளே சென்று நோட்டமிட்டதில், ஹைப்பர் மார்ட்டுக்குள் நுழைந்த பெர்னாட்ஷா போல உணர்ந்தேன். எஸ்.ராம கிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, இன்ன பிற எலீட் வலைப்பதிவாளர்கள் இணையத்தில் அளிக்கும் இலவச இலக்கியச் சேவைக்கு மிகுதியாக , சமீபத்தில் பெண் குழந்தையைப் பெற்ற ஒரு லோகாயதவாதிக்கு இலக்கியம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து 13 மாதங்கள் ஆகிறது. என் பெண்ணுக்கு வயது 13 மாதங்கள். நகர்ந்தேன்.

* நியூ ஹொரைசான் மீடியாவின் அரங்குக்குள் நுழைந்தேன். கண்ணுக்குப் புலப்பட்டவர்கள் எல்லாம் தெரிந்தார்கள். ஆனால் தெரிந்தவர்கள் யாரும் கண்ணுக்குப் புலப்படவில்லை. பத்ரி, பா.ராகவன் மற்றும் கிழக்கு எழுத்தாளர்களால் இணையத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட நூல்கள் தவிர்த்தும் பல புதிய டைட்டில்கள். சுஜாதா நூல்களும் அடக்கம். வாங்க வில்லை.

* கிழக்கிலே நியூஸ்லெட்டர் என்று நியூஸ்பிரிண்ட்டில் அச்சடித்த ஒரு ஒல்லிப் பத்திரிக்கையைக் கொடுத்தார்கள். விலை ஜஸ்ட் ரெண்டே ரூபாய்.அட என்று ஆச்சர்யத்துடன் வாங்கிப் புரட்டினேன். உள்ளே, வெறும் விலைப்பட்டியல் மற்றும் கிழக்கின் விளம்பரங்கள். விலைப்பட்டியலையே விற்பனை செய்யும் பதிப்பகம் இந்த ப்ளானட்டில் அனேகமாகக் கிழக்கு மட்டும் தான். ஒரு வேளை சந்திரனிலே இருக்கலாம். ஏன், தண்ணீர் இருக்கிறது, புஸ்தகக் கடை இருக்காதா?

* ஏற்கனவே விருப்பப்பட்டியலிலே ராஜீவ் காந்தி கொலை வழக்கு புத்தகத்தை சென்ற வாரமே வாங்கிவிட்டிருந்தேன். அட்டகாசமான திரில்லர். கிழக்கின் முயற்சி & உழைப்புக்கு சலாம்.

* திருச்சி புத்தகக் கடை அல்லது அது போலவே பெயர் கொண்ட கடை வாசலில் ஹரன்பிரசன்னா. ஆனால் உள்ளே கிழக்கின் மினிமேக்ஸ் புத்தகங்கள், பிரதானமாகக் சமையல் புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள். சமையல் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் தோராயமாக நாற்பது ஐட்டங்கள். கஞ்சா கருப்பு தவிர்த்த இன்ன பிறரது வாழ்க்கை வரலாறுகள். தயாரிப்பும் விலையும் கச்சிதம். பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது கட்டுகட்டாகப் பறக்கிறது. இந்த மினிமேக்ஸ் க்கான டார்கெட் ஆடியன்ஸின் நான் இல்லை என்பது நிச்சயமாகத் தெரிந்ததால், எதுவும் வாங்காது வெளியே வந்து பிரசன்னாவுடன் மொக்கை போட்டேன். பிசியாக இருந்தார். நியூஸ்லெட்டர் பாத்தீங்களா என்றார். விமர்சனத்தை ‘மென்மையாகச்’ சொன்னேன். நான் சொன்னது எதுவும் தன் காதில் விழவில்லை என்றார். வினோதமாக, அது என் காதிலும் விழவில்லை.

* கடந்த சில வருடங்கள் போலவே, இந்த வருடமும் எனக்கு முதல் போணி சுஜாதா புத்தகங்களே. விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பித்தது. கிழக்கை விடவும் தாளின் தரமும், அச்சு நேர்த்தியும் மட்டுதான். இருந்தாலும், அஞ்சப்பர் பிரியாணியை பீங்கான் ப்ளெட்ட்டில் சாப்பிட்டால் என்ன, பேப்பர் ப்ளேட்டில் சாப்பிட்டால் என்ன?

* அரங்குகளில், புத்தகங்களை வித்தியாசமாக , விசிறி மடிப்பு போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். தள்ளிவிட்டு, விழும் அழகை ஹாண்டிகாமில் சிறைப்பிடித்தால், நல்ல ஷாட் கிடைக்கும். கூடவே உதையும். செய்யாதீர்கள்.

* வழக்கம் போலவே, இந்த ஆண்டும் பழைய புத்தகக் கடைகளை, சாலையின் எதிர்ப்புறத்தில் அமைத்திருக்கிறார்கள். பல நூல்கள் வாங்கினேன். முக்கியமானது, fundamentals of renewable energy என்கிற CSIR விஞ்ஞானி எழுதிய நூலும், நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ’starlight starbright’ என்கிற ராண்டார்கை எழுதின அற்புதமான சினிமா நூலும். விலை Rs. 20/- each. (நண்பர்களுக்கு குறிப்பு : இங்கே நூல்களை வாங்க நினைத்தால், இருட்டுவதற்குள் முடித்து விடுங்கள். சின்ன எமெர்ஜென்சி லைட் வெளிச்சத்தில் தேடுவது கடினம்).

* பதிப்பகங்கள் என்ன காரணம் சொன்னாலும், புத்தகங்களின் விலையேற்றம் கவலை அளிப்பதாக இருக்கிறது. 600 ரூபாய் புத்தகத்தை 10 பேருக்கு விற்பதற்கு பதிலாக 60 ரூபாய் விலை வைத்து 100 பேருக்கு விற்றுச் சமன் செய்து, கூடவே readership ஐயும் அதிகரித்து , வருடா வருடம் வளர்ச்சியையும் ( growth) அடையலாம் என்கிற, வியாபாரத்தின் அடிப்படை சித்தாந்தத்தை, யார் இவர்களுக்குச் சொல்லித் தரப்போகிறார்கள்?

* அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

→ 20 மறுமொழிகள்பகுப்புகள்: Book Fair · Books · ilakkiyam
குறிச்சொற்கள்: , , , , , , ,

கைக்கு எட்டிய சிக்கன் பகோடா…..

நவம்பர் 8, 2009 · 11 மறுமொழிகள்

மழை விட்டிருந்தது.

காலையில் இருந்து வீட்டிலேயே அடைந்து கிடந்தது என்னவோ போல் இருக்க, அரைக்கால் டவுசரை மேலும் சுருட்டிக் கொண்டு நடை நீச்சல் அடித்துத் தெரு முனைக்குச் சென்றேன். வழக்கமாக இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ், நேற்று, எட்டரை மணிக்கெல்லாம் மூடப்பட்டு, கடை வாசலிலே, உரிமையாளர் , அவரது தம்பி, மேலும் இருவர் கும்பலாக நின்று கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

கையில், ஆளுக்கொரு இலை வைத்து, பக்கோடா போன்ற எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும்,

‘ அடடே வாங்க சார்… மழைனால கடைய சீக்கிரம் மூடிட்டோமே’

தன் தம்பியைப் பார்த்து, ‘ டேய், வீட்லேந்து சார்க்கு ஒரு கிங்ஸ் பாக்கட் எடுத்துட்டு ஓடியா’ என்றதும்,

நான், ” இல்ல இல்ல, ஸ்டாக் இருக்கு, வேண்டாங்க” என்றேன்.

உரிமையாளரின் தம்பி, கையில் இருந்த மந்தார இலையை நீட்டி, எடுத்துக்கங்க என்றார். இலையில் இருந்தது சிக்கன் பகோடா.

உடனே, கடை உரிமையாளர், தன் தம்பியை சட்டென்று கடிந்து கொண்டார்.” தம்பி, அவங்க அதல்லாம் சாப்ட மாட்டாய்ங்க.”, ” சார், அவனுக்குத் தெரியாது. நீங்க போங்க, “

கைக்கு எட்டிய சிக்கன் வாய்க்கு எட்டாமல் போன கடுப்பை விட ஆச்சர்யமே மேலோங்கியெது.

நாங்கள் வசிக்கும் ஏரியாவிலே, சாதி, குலம் கோத்திரம் போன்ற விவகாரங்கள் எளிதிலே மற்றவர்களுக்குத் தெரிந்துவிடாது. அனைவருமே, அனைவரிடத்துலே ஒரு safe distance காப்பது வழக்கம். இவருக்கு மட்டும் எப்படி ‘ சாப்டுவாங்க’, சாப்பிடமாட்டங்க’ என்ற விவரங்கள் தெரிந்திருக்கும் என்று சஸ்பென்ஸ் தாங்கவில்லை.

கேட்டே விட்டேன்.

‘ என்ன சார், உங்க வீட்லந்து ஒரு வாட்டி கூட நம்ம கடைல முட்டை வாங்கினதே இல்லியே, அப்ப, நீங்க சைவம் தானே’

எத்தனை ரிலையன்ஸ் ஃப்ரஷ் , ஸ்பென்ஸர்ஸ் டெய்லி வந்தாலும், நம்ம அண்ணாச்சிக் கடைகளை இடம் பெயர்க்கவே முடியாது என்று சிலர் சொல்வதன் அர்த்தம் புரிந்தது.

→ 11 மறுமொழிகள்பகுப்புகள்: Personal · bijines
குறிச்சொற்கள்: ,

உன்னைப் போல் ஒருவன்.

செப்டம்பர் 18, 2009 · 16 மறுமொழிகள்

unnaipoloruvan

முதலில், வெள்ளித்திரையில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் அண்ணன் இரா,முருகன் அவர்களுக்கு பழைய ராகாகி தோஸ்துகள் சார்பாக ஒரு பெரிய ‘ஓ’

சும்மா சொல்லக்கூடாது, மனுஷர், வசனங்களிலே பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது.

கதை? இந்தியில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய ‘ A wednesday‘ இன் அழுத்தமான மொழிபெயர்ப்பு. தீவிரவாதத்தின் மேல் கோபம் கொண்டு ‘பொதுஜனங்களிலே ஒருவன்’ கோபம் கொண்டு எழுந்தால் என்னாகும் என்பதுதான் கதை.

இந்த மாதிரி ஒரு நடிகன், தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் மோகன்லால், நல்லவேளை ஆலிவுட்டில் பிறக்காமல், ஆழ்வார்ப்பேட்டையில் ஜனித்தாரே என்று பெருமிதம் கொள்ள வைக்கும் கமல்ஹாசன், இந்தக் சீஃப் செகரட்டரி கேரக்டருக்கு , இவங்களை விட்டா வேற யார் இவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்க வைக்கும் ‘மேக்கப் தூக்கலான’ லக்ஷ்மி, ஒரு டிவி ஜர்னலிஸ்ட் கேரக்டரை கண்முன்னே இயல்பாகக் கொண்டு வந்து நிறுத்தும் அனுஜா ஐயர், சீனியர் இன்ஸ்பெக்டருக்கு உண்டான உடல்மொழியை திரையில் பிரதிபலிக்கும் பரத்ரெட்டி (சேது), ethical hacker ஆக ஒரே சீனிலே வந்து கலக்கும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ( மணிரத்னத்தின் அந்த நாள் படங்களின் செட் பிராபர்ர்டியான குட்டி ஆனந்த்) என்று அத்தனை பேரும் கலக்கி இருக்கிறார்கள். கணேஷ் வெங்கட்ராமன் ( இந்தியில் ஜிம்மி ஷெர்கில் செய்த பாத்திரம்) இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாம்.

காவல்துறை, ஆட்சித்துறை ஆகிய அதிகார மையங்களுக்கு இடையே இருக்கும் நுண் அரசியல், அழகாக வெளிப்படுகிறது, முக்கியமான காட்சிகளின் மூலமும், வசனங்களின் மூலமும்.

தமிழ்நாட்டு மக்கள், எளிதிலே connect செய்ய இயலாத வெடிகுண்டு கலாசாரத்தை, இவர் எப்படி ‘ அமைதிப்பூங்கா’ என்று அறியப்படும் நம்ம ஊருக்கு ஏற்ப மாற்றித் தரப்போகிறார் என்று நினைப்பவர்களுக்கு இனிய ஆச்சர்யம் காத்திருக்கிறது, க்ளைமாக்ஸில், மோகன்லாலுக்கும், கமலஹாசனுக்கும் நடக்கும் நீண்ட உரையாடலின் மூலம்.

கமலஹாசனை, ஏன் எல்லோரும் கமலஹாசன் என்று சொல்கிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம், அக்காட்சியும் உரையாடலும்.

மற்றபடி, இப்படத்தில் லாஜிக் இருக்கிறதா, இப்படத்தின் மையக்கரு, எம்மதத்திற்கு ஆதரவானது / எதிரானது, எந்த எந்த காட்சிகள், எந்த எந்த மதங்களை தூக்கிப் பிடிக்கிறது / குப்பையில் வீசுகிறது போன்ற விமர்சனங்களை எழுதித் தள்ள ஸ்கோப் அதிகம் கொடுத்ததற்காக, சம்மந்தப்பட்டவர்கள், கமலஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு முறை தலைவரிடம், தூர்தர்ஷன் பேட்டியிலே, ‘ உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?’ என்று கேட்டார் ஒரு ரசிகர். அதற்கு தலைவர் சொன்ன பதில், ‘ கமல்ஹாசன்’

தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி.

→ 16 மறுமொழிகள்பகுப்புகள்: Film Reviews

தமிழில் ஒரு Quick Gun Murugan?

ஆகஸ்ட் 27, 2009 · 2 மறுமொழிகள்

thamizpadam1

thamizpadam3

thamizpadam2

thamizpadam4

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: சினிமா போஸ்டர்
குறிச்சொற்கள்: ,