இது என்னோட point of view.
இது விமர்சனமில்லை. பார்த்ததில் இருந்து நான் புரிந்து கொண்டதை, எழுதுகிறேன்.
*******
ஆயிரத்தில் ஒருவன்
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் பேசும் ஒரு இனத்தினர் ( சோழர்கள்) , அதே தமிழ் பேசும் ஒரு மற்றொரு இனத்தினரால் ( பாண்டியர்கள்) நாட்டை விட்டுத் துரத்தப் படுகிறார்கள். சோழர்கள், அதற்குப் பழிவாங்க, பாண்டியர்களின் குலப்பெருமையான ஒரு ‘சிலயைக்’ கவர்ந்து கொண்டு அருகில் உள்ள ஒரு தீவினிலே ஒரு மறைவான இடத்தில் தஞ்சம் அடைகிறார்கள், என்றாவது ஒரு நாள் தாங்கள் இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் என்கிற நம்பிக்கையில்.
உண்மையில் , அவர்கள் ஒரு அமைதித் தூதுவனுக்காகக் காத்திருக்கிறார்கள்.
அப்படிச் சில நூற்றாண்டுகளாகக் காத்திருக்கும் சோழர்களின் இறுதி வாரிசு ( பார்த்திபன்), தீவிரவாதத் தன்மை கொண்ட தலைவன்.மூர்க்கன், அதே சமயம் தங்கள் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எந்த எல்லைக்கும் சென்று எதையும் செய்யத் தயங்காதவன். நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், நாகரீகம் எட்டிப் பாராத பிரதேசத்தைக் ராணுவத்துக்கு நிகரான கட்டுப்பாட்டுடன் கட்டிக் காப்பாற்றி வருகிறான். ‘இனி எப்ப எங்களுக்கு விடிவு காலம்?’ என்று கேள்வி கேட்டுப் புரட்சி செய்யும் தன் மக்களையே அழித்துக் கொண்டு, தன் நோக்கம் நிறைவேற, ‘புலி’ முத்திரை பொறித்த தூதுவனுக்காகக் காத்திருக்கிறார்.
கேள்வி கேட்டு அழிந்த மக்களைத் தவிர்த்து, மக்கள் அனைவரும் அவனுக்கு விசுவாசமானவர்கள். தலைவனுக்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளவும் தயங்காதவர்கள்.இவர்கள் பேசும் தமிழானது, மிக வினோதமானது ஆனால் அதுதான் கலப்படமில்லாத சுத்தமான தமிழ்.
தலைவனுக்கு ஒரு மதியூகி உண்டு. வயதானவர், நோய்வாய்ப்பட்டவர். ஆனால்,அவருடைய ஆலோசனை இன்றி தலைவன் செயல்படுவதில்லை. விரைவில், ஒரு தூதுவன் மூலமாக விடிவு வரும் என்று நம்பிக்கை அளித்துக் கொண்டு வருபவர் அவரே.
ஆனால், இவ்வளவு காலத்துக்குப் பின்னும், பாண்டியர்கள், சோழர்கள் மீதான விரோதத்தை மறக்காமல் மனதில் வைத்து வஞ்சம் பாராட்டுகிறார்கள். பாண்டியர்களின் உண்மையான நோக்கம், சோழர்கள் களவாடிக் கொண்டு போன தங்கள் குலப் பெருமையை மீட்பதே ஆகும். ஆனால், அவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லாமல், அவர்களுக்கு உதவி செய்யும் தூதுவன் போர்வையில் சோழர்களின் இருப்பிடத்தைத் தேடிப் புறப்படுகிறார்கள்.இந்தக் குழுவுக்குத் தலைமை ஒரு பெண் ( ரீமா சென்) . அப்படி முன்னின்று செல்வதற்கு காரணம், அவர், பாண்டியர்களின் நேரடி வாரிசு. இந்தப் பயணத்துக்கு என்று தனியான நோக்கமும் அவருக்கு உண்டு. சிறுவயதிலிருந்தே, இந்த நோக்கத்தை மனதில் வைத்து வளர்க்கப்பட்டவர். இந்தக் குழுவுக்குத் துணையாக ராணுவப்படையும் உண்டு.
ஒளிந்து வாழும் சோழர்களைப் போல அல்லாமல், பாண்டியர்கள், மனதிலே பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டிருந்தாலும், தோற்றத்திலுல் நடை உடை பாவனைகளிலும் நவநாகரீகர்கள். அவர்கள் ராணுவப்படைக்கு நவீன படைக்கலன்கள் உண்டு. அவர்களின் அந்தத் தேடுதல் பயணம், மிகவும் சிக்கலானது, கடுமையானதும், கண நேரத்தில் உயிரைப் பறிக்கும் அபாயம் நிறைந்ததும் ஆகும். ஆனால், அக்குழு அந்தத் தடைகளைனைதையும் தாண்டி, சோழர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்துவிடுகிறது, பாண்டியர்கள் குழு.
குழுவின், தலைமைப் பெண், தன் முதுகில் புலிமுத்திரையை வரைந்து கொண்டு, சோழர்களுடைய கூட்டத்தில் ஊடுருவிகிறார். ஆனால், சோழர் தலைவனுடைய வலதுகரமான அந்த முதியவருக்கு, இதிலே சின்ன நெருடல் உண்டு. பற்பல தந்திர உபாயங்கள் செய்து, அந்தப் பெண், சோழர்களின் நம்பிக்கைக்குப் உரியவராகிறார். சோழர் தலைவனுக்கு நம்பிக்கை ஏற்படும் தருணத்தில், பாண்டியர்களின் கடைசி வாரிசான அப்பெண், தன் சுயரூபத்தைக் காட்டி, ராணுவத்துக்குத் தகவல் சொல்லி, அவர்களை வரவழைக்கிறார்.
இதற்கிடையில், குழுவில் வந்த எடுபிடியாக வந்த இளைஞனுக்கு (கார்த்தி), இந்தக் குழுவின் நிஜமான நோக்கம் புரிந்து, அதனால் சோழர்கள் பால், பரிவும் பிரியமும் ஏற்படுகிறது.
ராணுவத்தை நேரடியாக எதிர் கொள்ள வேண்டிய இக்கட்டானச் சூழலில், பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும் இறுதிப் போர் நடக்கிறது. பாண்டியர்களின் போரை, அப்பெண்ணும், ராணுவ அதிகாரியும் வழி நடத்த, சோழர்களுக்கு உதவியாக கார்த்தி இருக்கிறார்.பாண்டியர்களின் நவீன ரக ஆயுதங்களுடன் போட்டி போட முடியாமல், சோழர்களின் படை, படிப்படியாக அழிகிறது. அந்த இக்கட்டிலும், தலைவனை, கேடயம் போல் வ்யூகம் அமைத்து, அவனுடைய தளபதிகள் காப்பாற்றுகிறார்கள். இறுதியில், சோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஒரு கடலோரத்தில் ஒரு முகாமில் அடைக்கப்ப் படுகிறார்கள்.
எந்த ஒரு வல்லரசின் / வல்லரசு ஆக விரும்பும் நாட்டின் ராணுவமும், போர்க்கைதிகளை எப்படி நடத்துமோ, அதே போல பாண்டியர் படையும் இலக்கில்லாத மூர்க்கத்துடன் சோழர்களைத் துன்புறுத்துகிறது. பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அவர்களை இயக்குவது , பாலியல் இச்சை அல்ல, சித்திரவதை செய்யும் இச்சையே. தலைவனை, மானாவரியாக அடித்துத் துன்புறுத்திக் கொல்கிறார்கள்.
போர் துவங்கும் வரை, சுறுசுறுப்பாக, முனைந்து காரியங்கள் செய்த அப்பெண் வாரிசு. இப்போது எங்கும் தென்படுவதில்லை. கைது செய்யப்பட்ட எஞ்சிய அந்த வீரர்கள், தங்கள் சிதைக்கப்ப்பட்ட தங்கள் தலைவன் உடல் சிக்ககூடாது என்று எண்ணி, ராணுவம் அசந்த நேரத்தில் உடலைத் தூக்கிக் கொண்டு கடலிலே சென்று மறைகிறார்கள்.
இந்த ரணகளத்தில் தப்பித்தவர்கள் இருவரே. ஒரு சிறுவனும், அவ்னைக் காப்பாற்றி மறைவிடத்தில் வைத்திருந்த எடுபிடி இளைஞன் கார்த்தியும்.
அச்சிறுவ்னைத் தோளில் சுமந்து நடக்கும் பொழுது, சோழனின் பயணம் தொடரும் என்று திரைப்படம் முடிகிறது அல்லது துவங்குகிறது.
[ இது நிஜமான சோழர்கள் / பாண்டியர்கள் குறித்து அல்ல என்பது, படம் துவங்குவதற்கு முன்னரே செல்வராகவன் செய்யும் பொறுப்புத்துறப்பு (disclaimer). அப்படியென்றால், இந்தப் படத்தின் பாண்டியர்களும் , சோழர்களும், பழிவாங்கத் துடித்த பெண்வாரிசும், பயணத்த்துக்கு அடிகோலிய அமைச்சரும், பாண்டியர் தலைவனும் யார் என்று தெரிந்து கொள்ள 17-May-2009 / 18- May-2009 தேதியிட்ட நாளிதழ்களைப் தேடிப்பிடித்துப் படிக்கவும்]




