Prakash’s Chronicle 2.0

கைக்கு எட்டிய சிக்கன் பகோடா…..

நவம்பர் 8, 2009 · 9 மறுமொழிகள்

மழை விட்டிருந்தது.

காலையில் இருந்து வீட்டிலேயே அடைந்து கிடந்தது என்னவோ போல் இருக்க, அரைக்கால் டவுசரை மேலும் சுருட்டிக் கொண்டு நடை நீச்சல் அடித்துத் தெரு முனைக்குச் சென்றேன். வழக்கமாக இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ், நேற்று, எட்டரை மணிக்கெல்லாம் மூடப்பட்டு, கடை வாசலிலே, உரிமையாளர் , அவரது தம்பி, மேலும் இருவர் கும்பலாக நின்று கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

கையில், ஆளுக்கொரு இலை வைத்து, பக்கோடா போன்ற எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும்,

‘ அடடே வாங்க சார்… மழைனால கடைய சீக்கிரம் மூடிட்டோமே’

தன் தம்பியைப் பார்த்து, ‘ டேய், வீட்லேந்து சார்க்கு ஒரு கிங்ஸ் பாக்கட் எடுத்துட்டு ஓடியா’ என்றதும்,

நான், ” இல்ல இல்ல, ஸ்டாக் இருக்கு, வேண்டாங்க” என்றேன்.

உரிமையாளரின் தம்பி, கையில் இருந்த மந்தார இலையை நீட்டி, எடுத்துக்கங்க என்றார். இலையில் இருந்தது சிக்கன் பகோடா.

உடனே, கடை உரிமையாளர், தன் தம்பியை சட்டென்று கடிந்து கொண்டார்.” தம்பி, அவங்க அதல்லாம் சாப்ட மாட்டாய்ங்க.”, ” சார், அவனுக்குத் தெரியாது. நீங்க போங்க, “

கைக்கு எட்டிய சிக்கன் வாய்க்கு எட்டாமல் போன கடுப்பை விட ஆச்சர்யமே மேலோங்கியெது.

நாங்கள் வசிக்கும் ஏரியாவிலே, சாதி, குலம் கோத்திரம் போன்ற விவகாரங்கள் எளிதிலே மற்றவர்களுக்குத் தெரிந்துவிடாது. அனைவருமே, அனைவரிடத்துலே ஒரு safe distance காப்பது வழக்கம். இவருக்கு மட்டும் எப்படி ‘ சாப்டுவாங்க’, சாப்பிடமாட்டங்க’ என்ற விவரங்கள் தெரிந்திருக்கும் என்று சஸ்பென்ஸ் தாங்கவில்லை.

கேட்டே விட்டேன்.

‘ என்ன சார், உங்க வீட்லந்து ஒரு வாட்டி கூட நம்ம கடைல முட்டை வாங்கினதே இல்லியே, அப்ப, நீங்க சைவம் தானே’

எத்தனை ரிலையன்ஸ் ஃப்ரஷ் , ஸ்பென்ஸர்ஸ் டெய்லி வந்தாலும், நம்ம அண்ணாச்சிக் கடைகளை இடம் பெயர்க்கவே முடியாது என்று சிலர் சொல்வதன் அர்த்தம் புரிந்தது.

→ 9 மறுமொழிகள்பகுப்புகள்: Personal · bijines
குறிச்சொற்கள்: ,

உன்னைப் போல் ஒருவன்.

செப்டம்பர் 18, 2009 · 14 மறுமொழிகள்

unnaipoloruvan

முதலில், வெள்ளித்திரையில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் அண்ணன் இரா,முருகன் அவர்களுக்கு பழைய ராகாகி தோஸ்துகள் சார்பாக ஒரு பெரிய ‘ஓ’

சும்மா சொல்லக்கூடாது, மனுஷர், வசனங்களிலே பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது.

கதை? இந்தியில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய ‘ A wednesday‘ இன் அழுத்தமான மொழிபெயர்ப்பு. தீவிரவாதத்தின் மேல் கோபம் கொண்டு ‘பொதுஜனங்களிலே ஒருவன்’ கோபம் கொண்டு எழுந்தால் என்னாகும் என்பதுதான் கதை.

இந்த மாதிரி ஒரு நடிகன், தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் மோகன்லால், நல்லவேளை ஆலிவுட்டில் பிறக்காமல், ஆழ்வார்ப்பேட்டையில் ஜனித்தாரே என்று பெருமிதம் கொள்ள வைக்கும் கமல்ஹாசன், இந்தக் சீஃப் செகரட்டரி கேரக்டருக்கு , இவங்களை விட்டா வேற யார் இவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்க வைக்கும் ‘மேக்கப் தூக்கலான’ லக்ஷ்மி, ஒரு டிவி ஜர்னலிஸ்ட் கேரக்டரை கண்முன்னே இயல்பாகக் கொண்டு வந்து நிறுத்தும் அனுஜா ஐயர், சீனியர் இன்ஸ்பெக்டருக்கு உண்டான உடல்மொழியை திரையில் பிரதிபலிக்கும் பரத்ரெட்டி (சேது), ethical hacker ஆக ஒரே சீனிலே வந்து கலக்கும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ( மணிரத்னத்தின் அந்த நாள் படங்களின் செட் பிராபர்ர்டியான குட்டி ஆனந்த்) என்று அத்தனை பேரும் கலக்கி இருக்கிறார்கள். கணேஷ் வெங்கட்ராமன் ( இந்தியில் ஜிம்மி ஷெர்கில் செய்த பாத்திரம்) இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாம்.

காவல்துறை, ஆட்சித்துறை ஆகிய அதிகார மையங்களுக்கு இடையே இருக்கும் நுண் அரசியல், அழகாக வெளிப்படுகிறது, முக்கியமான காட்சிகளின் மூலமும், வசனங்களின் மூலமும்.

தமிழ்நாட்டு மக்கள், எளிதிலே connect செய்ய இயலாத வெடிகுண்டு கலாசாரத்தை, இவர் எப்படி ‘ அமைதிப்பூங்கா’ என்று அறியப்படும் நம்ம ஊருக்கு ஏற்ப மாற்றித் தரப்போகிறார் என்று நினைப்பவர்களுக்கு இனிய ஆச்சர்யம் காத்திருக்கிறது, க்ளைமாக்ஸில், மோகன்லாலுக்கும், கமலஹாசனுக்கும் நடக்கும் நீண்ட உரையாடலின் மூலம்.

கமலஹாசனை, ஏன் எல்லோரும் கமலஹாசன் என்று சொல்கிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம், அக்காட்சியும் உரையாடலும்.

மற்றபடி, இப்படத்தில் லாஜிக் இருக்கிறதா, இப்படத்தின் மையக்கரு, எம்மதத்திற்கு ஆதரவானது / எதிரானது, எந்த எந்த காட்சிகள், எந்த எந்த மதங்களை தூக்கிப் பிடிக்கிறது / குப்பையில் வீசுகிறது போன்ற விமர்சனங்களை எழுதித் தள்ள ஸ்கோப் அதிகம் கொடுத்ததற்காக, சம்மந்தப்பட்டவர்கள், கமலஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு முறை தலைவரிடம், தூர்தர்ஷன் பேட்டியிலே, ‘ உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?’ என்று கேட்டார் ஒரு ரசிகர். அதற்கு தலைவர் சொன்ன பதில், ‘ கமல்ஹாசன்’

தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி.

→ 14 மறுமொழிகள்பகுப்புகள்: Film Reviews

தமிழில் ஒரு Quick Gun Murugan?

ஆகஸ்ட் 27, 2009 · 2 மறுமொழிகள்

thamizpadam1

thamizpadam3

thamizpadam2

thamizpadam4

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: சினிமா போஸ்டர்
குறிச்சொற்கள்: ,

தமிழ்மணம் – உரையாடல்

ஆகஸ்ட் 26, 2009 · 1 மறுமொழி

இந்த வார தமிழ்மண நட்சத்திரம் காசி யின்கேள்விகளும், அதற்கான என் பதில்களும்.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்றுஎண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்செய்யவேண்டும்?

தேவையான அளவு என்பது ஒவ்வொருவரின் தேடுதல் விருப்பத்தைப் பொறுத்தது. காட்டாக, உள்ளடக்க அளவிலே, தமிழ் இணையத்தில், சினிமா கணிசமான அளவு பங்களிப்பு செய்து வருகிறது. தமிழ் திரையுலகம் குறித்து பல ஆயிரம் மெகாபைட் அளவுத் தகவல்களை விரல் சொடுக்கில் திரட்டி விடலாம். அதனால், சினிமா தகவல்களுக்கு இணையம் தான் முழுமையான களஞ்சியம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், இன்றைக்கு வெளியான திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள், தேவைக்கு அதிகமாகவே கொட்டிக் கிடக்கிற அதே நேரத்தில், முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு க்ளாசிக் திரைப்படத்தைப் பற்றிய தகவல் எதுவுமே இல்லாமல் போகலாம்.

பெரும்பான்மை மக்கள் ஈடுபாடு காட்டும் சினிமாவுக்கே இந்த நிலை என்றால், வரலாறு, தத்துவம், பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, பிற நிகழ்த்துகலைகள், நூல் விமர்சனங்கள், அறிவியல் போன்றவை பற்றிக் கேட்கவே வேண்டாம். இதற்கு பொருளாதார ரீதியான காரணங்கள் உண்டு.

என்ன என்ன துறைகள் பற்றிய அறிவு மக்களுக்கு ஏற்பட்டால் பொருளாதார ரீதியிலே பலன் இருக்குமோ, அத்துறைகளே, தமிழ் இணையத்தில் ஆர்வமாக ஈடுபடுகின்றன. அரசியல் கட்சிகள், பதிப்பகங்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், பத்திரிகைகள் ஆகியவை உதாரணம்.

இவற்றுக்கு முக்கிய காரணம், ஒரு வகையான அறியாமையே. சென்னையில் , தமிழ் மக்களுக்காக இயங்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற நிறுவனம், தன்னுடைய இணையத்தளத்தை முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே வைத்திருப்பது அபத்தம். முழுக்க முழுக்க தமிழிலேயே இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம், ஒரு தமிழ்லும் ஒரு version ஐ வைக்கலாம். ஆனால், இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை, அவர்கள் அறியாமல் இருக்கலாம். நுட்பத்தின் சாத்தியங்களை விளக்கி, அந்த அறியாமையைப் போக்குவது அவசியம்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

ஓரளவுக்கு அனுபவிக்கிறது என்றே நினைக்கிறேன். ஒருங்குறியின் அறிமுகத்துக்குப் பிறகு, பெரும்பான்மையான இடங்களில் தமிழ் செல்லுபடியாகிறது.கூகிள், யாஹூ, ஆர்க்குட், பேஸ்புக் போன்ற இணையத்தின் பெருநிறுவனங்கள், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிடத்தில் அனுசரணையுடன் நடந்து கொள்கின்றன. ஆனால், அரசு விவகாரங்கள் தான் குளறுபடி. அரசின் ஒவ்வொரு துறையும் தங்கள் இஷ்டத்துக்குச் செயல்படுகின்றன. இன்னமும் சில அரசுதளங்களில், எழுத்துருவுக்குப் பதிலாக, தட்டச்சு செய்த காகிதத்தை ஒளிவருடி. அதைப் படங்களாக வலையில் ஏற்றும் கோராமையைக் காணலாம். மின் வணிகத்தைப் பொறுத்தவரை, தமிழ்ப் புழக்கம் கிட்டதட்ட பூஜ்யம் தான். இன்றைய நிலைமையில், தமிழ் அதிகம் புழங்குவது, தமிழ் வலைப்பதிவுகளில் தான்.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

something is better than nothing என்ற அளவில் தான் இருக்கின்றன. தன்னார்வத்தைத் தூண்டுவது கடினம். மேலும், உலக அளவில் ஆங்கிலம் பேசுபவர்களை விட, தமிழைப் புழங்குபவர்கள், பல மடங்கு அளவில் குறைவு என்பதால், அந்த விகிதத்துக்கு ஏற்றது போல, தமிழில் தன்னார்வலர்கள் குறைச்சலாகத்தான் இருப்பார்கள். மேலும் தன்னார்வத் தொண்டு செய்யும் விருப்பமுள்ளவர்களுக்கு, அதற்கான கணிணி, இணையத் தொடர்பு போன்ற வசதிகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது இந்த வசதிகள் இருந்தும், விகிபிடீயா போன்ற முயற்சிகள் குறித்து அறியாமல் இருக்கலாம். இது போன்ற தடைகளைக் களைந்தால், கணிணித் தமிழ் இன்னும் பரவலாகும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கானசெயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

  • தமிழகம் முழுக்க, யூனிகோட் என்கிற ஒருங்குறியை standadize செய்வது முதல் வேலையாக இருக்கும்.
  • அரசு வசமுள்ள அனைத்துக் கணிணி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான தமிழ்ச் செயலிகள்.
  • உருப்படியான தமிழ் OCR உருவாக்க, ஒரு நல்ல டீம் உருவாக்குவது.
  • சைபர் கேஃப் கணிணிகள் அனைத்திலும், கட்டாயமாக ஏதாவது ஒரு தமிழ்ச் செயலி.
  • தமிழிலும் பெயர்ப்பலகை போல,தமிழ் நாட்டு மக்களைக் குறிவைத்து இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் இணையத்தளத்துக்கு ஒரு தமிழ் version வைக்க வேண்டும் என்று – முடிந்தால் வேண்டுகோள், படியாமல் போனால் உத்தரவு.
  • 5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாகவலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

    மொத்தமாகவே 20 அல்லது 25 பதிவுகள் இருந்த காலத்திலிருந்தே வலைப்பதிவுகளை எழுதிக் கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்கிறேன். அப்போதில் இருந்து, நாளது வரையிலான மாற்றங்கள், கவனிக்கச் சுவாரசியமாக இருக்கின்றன. அந்த சூழலில், வலைப்பதிவு உலகம் ஒரு கற்றறிந்தோரின் சபை போலத்தான் இருந்தது. சிக்கலான வழிமுறைகள் காரணமாக, நுட்பத்தை நன்றாக அறிந்தோர் மட்டுமே எழுதும் சூழல், சிறிது சிறிதாக மாற, அதற்கேற்றார் போல, அனைத்துத் தரப்பினரும், வலைப்பதிவு துவங்கி எழுத, இயல்பாக ஜனநாயகம் மலரத் துவங்கியது. முழுமையான explosion நடக்கவில்லை எனினும், அதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன.

    தமிழ் வலையுலகம் என்பது, பெரும்பான்மை மக்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கவேண்டுமே தவிர, ஒரு மேட்டுக்குடிச்சர்வகலாசாலையின் நூலகம் போல இருக்கக் கூடாது என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

    புதிய வலைப்பதிவருக்கான யோசனைகள் :

  • நிச உலகுக்கும் வலையுலகுக்கும் பெரிய வித்தியாசமில்லை. நிசத்தில், முன்பின் தெரியாதவர்களிடம், என்ன முன் ஜாக்கிரதை உணர்வுடன் நடந்துகொள்வீர்களோ, அதே அளவு ஜாக்கிரதை உணர்வு, வலையில் உலவும் பொழுதும் தேவை.
  • ‘இது என் சொந்த இடம். இங்கே நான் எழுதுவது – நானாக வேறு யாருக்கும் சொல்லாத போது – வேறு யாருக்கும் தெரியாது’ என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம். நுட்பத்தின் உதவி கொண்டு எளிதிலே கண்டுபிடித்து விடலாம். உங்களைத் தவிர வேறு யாரும் படிக்கக் கூடாது என்று நினைக்கிற சங்கதிகளை, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிப் போட்டு, நீங்களே அதை வாசித்து மகிழுங்கள். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டும் என்றால், வலைப்பதிவை, ப்ரைவேட் இடமாக்கி, நீங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும் அனுமதி தாருங்கள்
  • புனைப்பெயரில் எழுதலாம். ஆனாலும், உங்கள் எழுத்தின் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு. அதான் சொந்தப் பெயர் விவரம் யாருக்கும் தெரியாதே என்று நினைக்காதீர்கள். எழுதும் ஆசாமி யார் என்று கண்டுபிடித்துவிடலாம். சட்டத்துக்கு உட்படாமல் எதையாவது, பொய்ப்பெயரில் எழுதி, ஆப்பு மேலே ஆசைப்பட்டுப் போய் உட்கார்ந்து ‘பின்னை’ புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள்.
  • உங்கள் சொந்த அனுபவங்களைத் தாராளமாக எழுதலாம். பிரச்சனை வந்தால் சமாளிக்க முடியும் என்று தோன்றினால் மட்டுமே உங்கள் குற்றச்சாட்டு , ஆதங்கங்களை, நிஜமான பெயர் தகவல்களுடன், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக ‘எங்க பிராஜக்ட் மேனேஜர் ஒரு ஜொள்ளுபார்ட்டி’ என்று, அவர் பெயர், கம்பெனி பெயர் எல்லாம் குறிப்பிட்டு எழுதாதீர்கள். கருத்துச் சுதந்திரத்தையும் இதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். எங்கேயாவது அந்த பிராஜக்ட் மேனெஜர் கண்ணில் பட்டு பிரச்சனை ஏற்பட்டால், அதைச் சமாளிக்கத் தைரியம் இருந்தால் மட்டுமே எழுதுங்கள்.
  • தமிழிலும் எரிதங்கள் வரும். பின்னூட்டங்களை மாடரேட் செய்யுங்கள்.
  • எழுத்தினால், புரட்சி எல்லாம் செய்ய முடியாது. அதற்கு நேராக களத்தில் இறங்க வேண்டும். நிசத்தில் தொடைநடுங்கியாக இருந்து கொண்டு, வலையில், அதிகாரத்தின் அடக்குமுறை பற்றி போர்க்கொடி பிடிக்கமுடியாது. உதாரணமாக, கோய்ந்தசாமி என்கிற ஒரு ஆசாமியின் வலைப்பதிவு, கோய்ந்தசாமி என்கிற நிஜ பர்சனாலிட்டியின் நீட்சிதானே தவிர, வலைப்பதிவில் கோய்ந்தசாமி திடும் என்று ராபின்ஹூட்டாக எல்லாம் மாறிவிட முடியாது.
  • தட்டுப்பிழை இல்லாமல் தமிழ் எழுதப் பழகுங்கள்.
  • 6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

    முதலில் தமிழ்மணத்துக்கு வாழ்த்துகள்.

    தமிழ் வலைப்பதிவுகளின் தலைவாசலாக விளங்கும் தமிழ்மணம், ஒரு engineering masterpiece என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்மணத்தின் வடிவமைப்பு, மீண்டும் மீண்டும் வந்து பார்க்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு இணையத்தளத்தை, தொடர்ந்து ஐந்து வருடங்களாக, தினமும் நாலைந்து முறை வந்து பார்க்கவேண்டிய சில தேவைகள் இருக்கின்றன. அத்தேவைகளைத் தமிழ்மணம் பரிபூரணமாகப் பூர்த்தி செய்வதே, தமிழ்மணத்தின் வெற்றிக்குக் காரணம்.

    முதலில், வலைப்பதிவுகளைப் பட்டியலிடத் துவங்கி, பின்பு பின்னூட்டங்களையும் திரட்டி, அப்படியே படிப்படியாகப் பல்விதமான சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வளர்ந்து வரும் நுட்பத்துக்கு ஏற்றாற்போல, தமிழ்மணம் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது. பல புதிய திரட்டிகளின் வருகைக்குப் பிறகும், தமிழ்மணம் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு இதுவும் காரணம். இந்நிலை தொடரவேண்டும்.

    மேலும், தமிழ்மணம், சில பரிசோதனை முயற்சிகளைச் செய்யலாம்.

  • தமிழ்மணம், அனைத்து வலைப்பதிவுகளைத் தன் குடையின் கீழ் வைத்துத் திரட்டுவதற்குப் பதிலாக, விருப்பமுள்ளவர்கள், தங்களுக்கு என்று ஒரு personalized தமிழ்மணத்தை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்யலாம்.
  • தமிழ்மணம் நிரலியின் code ஐ விருப்பமுள்ள developer களுக்கு வழங்கி, வலைப்பதிவு சார்ந்த செயலிகள், தமிழ் இணையத்துக்குக் கிடைக்க வழிவகை செய்யலாம்.
  • தமிழ்மணத்தின் code ஐ வைத்து business applications உருவாக்க நினைப்பவர்களிடம் பணம் பெற்று, தமிழ்மணத்துக்கு என்று
    ஒரு ‘வருவாய்-மாதிரி’ யை உருவாக்கலாம்.
  • தமிழ் இணையத்தில், ‘ தமிழ்மணம்’ ஒரு வலுவான, நிலையான பிராண்ட் ஆக உருப்பெற மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    → 1 மறுமொழிபகுப்புகள்: Blogosphere
    குறிச்சொற்கள்:

    kanthaswamy – kodumai da saami

    ஆகஸ்ட் 21, 2009 · 19 மறுமொழிகள்

    கந்தசாமி

    ஷங்கர் மாதிரி படங்காட்ட வேண்டும் என்று சுசிகணேசனும், புரடியூசர் தாணுவும் நினைத்ததிலே தப்பில்லை. ஆனால், கோடிகளை கொட்டி இறைத்தால் சூப்பர் ஹிட் படம் கொடுத்துவிடலாம் என்று நினைத்ததுதான் தப்பு.

    அத்தனையும் வோட்கா என்று நினைத்து வெறுந்தண்ணியில் கலந்த சோடா.

    கதை?

    மூன்றரை மணிநேரம் உட்கார்ந்து பார்த்தும், சத்தியமாகப் புரியவில்லை. உண்மைத்தமிழன் அண்ணாச்சி, படம் பார்த்து, ப்ரேம் பை ப்ரேம், ஷாட் பை ஷாட் விவரித்து அனுபவித்து எழுதும் பொழுது, படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    ஒரு குண்ஸாகச் சொல்லணும் என்றால், இருப்பவர்களிடம் இருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின்ஹூட் டைப் கதை.

    சிபிஐயில் எஸ்பி ஆக இருக்கும் விக்ரம், இரவில் சேவல் மாதிரி முகமூடி , மேனரிசங்களுடன், சூப்பர் ஹீரோவாக, தாவுகிறார், ஓடுகிறார், சண்டை போடுகிறார். திருப்போரூரில் இருக்கும் கந்தசாமி கோயிலில் வேண்டுதலுக்காக மக்கள் பேப்பெரில் எழுதி வைக்கும் கோரிக்கைகளை, இவர் சுட்டுக் கொண்டு வந்து நிறைவேற்றுகிறார். அதற்குப் பணம்? சிபிஐயில் ரெய்டிலே கிடைக்கும் பணத்தை தான தர்மம் செய்கிறார். ஆனால், இந்த வேலைக்கு எதற்கு சூப்பர் ஹீரோ வேஷம் என்று புரியவில்லை. அவரிடம் அடி வாங்குபவர்கள் எல்லாம் வழக்கமாக விஜய் அஜீத் படங்களில் உதை வாங்குபவர்களே. இந்த வழக்கமான ஹீரோ வேலைக்கு எதற்கு பறக்கிறார், சேவல் மாதிரி கொக்கரிக்கிறார் என்று புரியவில்லை. ( அப்ப மத்ததெல்லாம் புரிஞ்சிருச்சாமா? – மனஸ் )

    இந்த ராபின்ஹூட் வேலை செய்வதற்குத் தோதான ஃபிளாஷ்பேக், அவரைப் பிடிக்க ஒரு ஒரு டிஐஜி ( பிரபு) , உரித்த (சீக்கு வந்த) கோழி போல ஹீரோயின், நாலைந்து சீனுக்கு ஒருமுறை ஜிகுஜிகா பெயிண்ட் அடித்துப் வரிகள் புரிந்து தொலைக்காத பாட்டு, கொஞ்சம் ஹைடெக் திருட்டு, இறுதியிலே நீதி போதனை என்று அதே ஷங்கர் ஃபார்முலா. ஆனால் எடுத்த விதத்தில் அத்தனையும் சொதப்பல். இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தொங்குகின்றன. தேவிஸ்ரீபிரசாத், பின்னணி இசை என்கிற பேரில் கொல்கிறார். நடுவே திடீரென்று வடிவேலுவின் படுமொக்கையான தனி காமெடி டிராக். திடுதிப்பென்று படத்தைப் பாதியில் நிறுத்தி, இருக்கிற ஃபுட்டேஜை எடிடிங்கில் ஒப்பேத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. கடைசிக் காட்சியில், விக்ரம் தோன்றுவது, மணிரத்னத்தின் ராவணா பட கெட்டப்பில்.

    தாணு காசில், சுசிகணேசன் மஞ்சள் குளித்திருக்கிறார். இதிலே விக்ரம் நிலைமைதான் பரிதாபம். ஏழைகளையும் ஏழ்மையையும் மையப்படுத்தி காசு பண்ணும் வர்த்தகங்கள் உண்டு. கந்தசாமியும் கிட்டதட்ட அதே மாடல் பிசினஸ் தான். ஆனால், நல்லவேளையாக, படம் ஓடாது.

    மசாலாப் படங்களுக்கு லாஜிக் தேவை இல்லை. ஆனால் internal logic என்ற ஒன்று தேவை. ரெய்டு செய்து கிடைக்கிற பணத்தை எல்லாம் சுண்டல் மாதிரி விநியோகம் செய்ய சாத்தியமே இல்லை என்கிற ( படத்தில் இருக்கும் பல ஒட்டைகளுள் ஒரே ஒரு ) ஓட்டையை, சுசிகணேசனின் கடைசி உதவி இயக்குனர் சுட்டிக் காட்டியிருந்தால் கூடப் போதும், படம் பிழைத்திருக்கும்.

    படத்தில் பிடித்த ஒரே ஒரு விஷயம், ஷ்ரேயாவின் கிறங்கடிக்கும் பின்னணிக்குரல். யார் குரல் அது?

    → 19 மறுமொழிகள்பகுப்புகள்: Film Reviews
    குறிச்சொற்கள்: , , , ,