நாலு வரி நோட்டு – ஒரு பார்வை

திரைப்படக்கலை என்பது, பல திறமைகள், வித்தைகள், நுட்பங்களின் கூட்டுக்கலவை.

chokkan இந்தியத் / தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, இதன் பல நுட்பங்களுக்கு சம்பிரதாயமான முன்னோடிகள் கிடையாது. உதாரணமாக நம் திரைப்படங்களின் பிரதான அம்சமான dance & stunt choreography ஆனது பல பாரம்பரியமான கலைகளில் இருந்து இரவல் பெற்று பின்னர் அவை தனிக்கலைகளாகச் சுயாதீனம் பெற்றிருக்கின்றன ( இல்லை என்று வரிந்து கட்டும் ப்யூரிஸ்ட்டுகளை பின்னர் கவனித்துக் கொள்ளலாம்). நடனத்தில் வழுவூர் ராமய்யா பிள்ளை, ஹீராலால் தொடங்கி பிரபுதேவா, தினேஷ் மாஸ்டர் ( 2011 ஆண்டு தேசிய விருது பெற்றவர்) வரையிலும் ஸ்டண்ட்டில் ஷ்யாம்சுந்தர் தொடக்கம் பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன் வரையில் பலரும் இப்படித் தனித்துவம் பெற்ற கலைஞர்கள்தாம்.

தமிழ்த் திரைப்படக்கலையின் இந்த வளைந்து கொடுக்கும் தன்மையும், புதியனவற்றை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் தான், இக்கலையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

இதிலே திரைப்படப் பாடல் எழுதும் திறன் என்பது மேற்சொன்னவற்றில் இருந்து சற்றே வேறுபட்டது.

giraதொடக்கத்தில் தமிழ்த் திரைப்படங்களானது, புராணங்களையும் கர்ண பரம்பரைக்கதைகளையும் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டன. எந்தச் சந்தர்ப்பத்தில் எந்தப் பாடல் என்ன பாணியில் இருக்கவேண்டும் என்பதற்கு, அந்தப் புராணத்தின் / கதையின் மூல வடிவம், ஒரு வழிகாட்டி போல அமையும். உதாரணமாக, கர்ணன் படத்தின், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற பாடலுக்கான situation ஒரிஜினல் மகாபாரதக் கதையிலே உண்டு ( என்று நினைக்கிறேன்). அப்பாடலை எழுதிய கண்ணதாசனுக்கு சங்க இலக்கியப் பரிச்சயமும் இருந்ததால், சரியான ரெஃபரன்ஸுடன், கச்சிதமாக இரண்டையும் ( பாடல் சூழல் / மூலக்கதை) map செய்து, தமிழ் சினிமாவின் மெலோட்ராமாவுக்கு ஏற்ப ” செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி…” என்று சிக்சர் அடித்து, கர்ணனின் பாத்திரத்துக்கான நியாயத்தைச் சாரமாகப் பிழிந்து வைத்து விடுகிறார்.

கண்ணதாசன் மட்டுமல்ல, கவித்திறனும், இலக்கியப் பயிற்சியும் இருக்கப் பெற்ற பல திரைப்படப் பாடலாசிரியர்கள் பட்டையைக் கிளப்பினார்கள்.

ஆனால் காலம் மாறிவிட்டது.

அதாவது இலக்கியப் பரிச்சயமும், இலக்கணப் பயிற்சியும் கொண்ட கவிஞர்கள் திரைப்பாடல்கள் எழுதிய வரையிலும் அப்பாடல்களை அதன் திரைப்படத் தொடர்பு / இசை தாண்டியும் அனுபவித்து ரசிக்க, ஆராய்ந்து மகிழ, பிரித்து மேயச் சில காரணங்கள் இருந்தன. நாளாவட்டத்தில் அது குறைந்து, இந்த ‘ஒய் திஸ் கொலவெறி’ காலத்திலும் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். திரைப்படங்களிலே பாடல் இடம் பெறவேண்டியதற்கான காரண காரியங்களிலே அதிரடியாக மாற்றங்கள் ஏற்படும் பொழுது ( ஹீரோயினை, நம்ம ஹீரோ,  பஸ்ல வெச்சு லிப்டுலிப்  கிஸ் அடிக்கற இந்த இடத்துல சட்டுன்னு கட் பண்ணி ஒரு ஃபாரீன் சாங் , அப்படியே இண்டர்வல் ப்ளாக்குக்கு அப்பறம் மாங்கா தேங்கா எல்லாம் போட்டு ஒரு குத்துப் பாட்டு …. அப்படியே அள்ளிக்கும்) , மானாங்காணியாக எதையோ எழுதி வரிகளை இசைக்குள் மறைத்து ஒப்பேற்றி வரும் காலட்டத்தில் திரைப்படப் பாடல்களிலே அர்த்தமாவது இலக்கியமாவது என்று நினைக்கிறோம் இல்லையா? ]

அது தவறு என்கிறார்கள், சொக்கன், மோகனகிருஷ்ணன், & ஜிராகவன் ஆகிய மூவரும்.

mohanakirshnanஇவர்கள், நாலுவரி நோட்டு என்ற ஒரு நூல் வரிசை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். மூவரும் ஆளுக்கொரு பாகமாக எழுதியிருக்கிறார்கள்.

அதாவது, தம் ரசனையின் அடிப்படையில் சில பாடல்களைத்  தெரிவு செய்து,  அப்பாடல்களின் வரிகளை ஆராய்ந்து அதன் reference ஐ புராணங்களிலும், சங்க இலக்கியத்திலும், பழங்கதைகளிலும் பழமொழிகளிலும், வட்டார வழக்குகளிலும் அடையாளம் கண்டு, அந்தத் தேடலைச் சிறு குறிப்புகள் / கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்துவதுதான் மூவர் குழுவின் திட்டம்.

அதில் தெரிவு செய்யப்பட்ட குறிப்புகள் நூல் தொகுப்புகள் ஆகியிருக்கின்றன. ( இதிலே இன்னொரு சிறப்பு, இந்த நூல் வரிசை, ஜெயமோகன் ஃபார்முலாவைப் பின் பற்றி வந்திருக்கிறது. அதாவது முதலிலே இலவசமாக இணையத்திலும், பின்னர் அச்சிலும் கொண்டு வரும் ஹிட் ஃபார்முலா)

இதை, ஒரு நூல் வடிவத்தில் வந்திருக்கும் ஒரு project என்றே சொல்லுவேன்.

ஒரு பாடலை இசை ரசிகர்கள் எப்படி, அதன் நுட்பங்களையும் கலை அம்சங்களையும் நட்டு போல்ட்டுத் தொடக்கம் அனைத்தையும் பிரித்துப் போட்டு ஆராய்கிறார்களோ அதே போல நாலுவரி நோட்டு பாடல்வரிகளை அணுகியிருக்கிறது. எழுதிய இம்மூவரின் இலக்கிய / இலக்கணப் பயிற்சியும் இம்முயற்சிக்குக் கைகொடுத்து, ஒரு வேறுபட்ட ஆனால் authentic ஆன வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

உதாரணமாக சின்னக் கவுண்டரின் ஈவ் டீசிங் பாட்டிலே ஒரு வரி, ” வீணா வரிஞ்சு கட்டி வம்பிழுத்ததாலே,,’ என்று வருகிற வரியில் வரும் ‘வரிஞ்சு கட்டி’ என்கிற பதத்துக்கான உண்மையான அர்த்தத்தை ஆராய்கிறது சொக்கனின் ஒரு குறுங்கட்டுரை. நிலவு தென்படும் பாடல்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான கட்டுரை எழுதி, அதை இறுதியில் அருணகிரிநாதரின் கந்தரகராதியில் கொண்டு போய் முடிச்சுப் போடுகிறார் ஜிரா. ‘அடியே நாளையேனும் மறக்காமல் வா’ என்கிற பாலகுமாரனின் பிரபல கவிதைக்கும் சோளம் வெதைக்கையிலே பாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்கிறார் மோகனகிருஷ்ணன்.

இது போன்ற பல சுவாரசியமான interpretations தான் நூல் முழுவதும்.

இதை வாசிக்கும் பொழுது நமக்குக் கிடைக்கும் இன்பத்தை விடவும் இந்தத் திட்டத்துக்கான பாடல்களைத் தெரிவு செய்ததும், ஆராய்ச்சியில் இறங்கியதும் அவர்கள் மூவருக்கும் அதிகமான இன்பத்தைத் தந்திருக்க்கும் என்று நினைக்கிறேன். அது குறித்தும் முன்னுரையில் ஆசிரியர்கள் கோடி காட்டியிருக்கலாம். இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கும்.

இது இணையத்தில் வெளியான பொழுதே வாசித்திருக்கிறேன். இந்தத் திட்டத்துக்காகவே ஒரு புதிய பதிப்பகத்தைத் தொடங்கி இந்த நூல் வரிசையை வெளியிட்டிருக்கிறார்கள் எனும் பொழுது, இது எவ்வளவு சீரியாசன விஷயம் என்று எனக்கு உறைக்கிறது. நன்றாக விற்பனை ஆகக் கூடிய புத்தகங்களை வெளியிட்டுக் காசு பார்க்கும் சூழலிலே, தனிப்பட்ட ஆர்வத்திலும், ஈடுபாட்டிலும், இம்மாதிரி, குறிப்பிட்ட ரசனைக்காரர்களுக்கென்று நூலைக் கொண்டு வந்திருக்கும் முயற்சியை வாழ்த்துகிறேன்.

தமிழ்ச் சினிமா பாடல் ரசனை கொண்டவர்கள் தங்கள் collectors edition இலே அவசியம் வைத்துக் கொள்ளவேண்டிய நூல்கள் இவை மூன்றும்.

நாலுவரி நோட்டு (1,2,3) | சொக்கன், ஜிரா, மோகனகிருஷ்ணன் | முன்னேர் பதிப்பகம் | Rs.125 each.

நூலை இங்கே வாங்கவும்.

நான் வித்யா

vidya

வாசித்ததும் மனசு கனத்துப் போனது என்று சொன்னால் அது க்ளிஷே ஆகப் பார்க்கப் படுமோ என்று தோன்றுகிறது.

கணிப்பொறி அறிவியலில் இளநிலைப் பட்டமும், மொழியியல் பாடத்தில் முதுகலையும் படித்துவிட்டு, நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், தன்னுடைய ஆண் என்கிற அடையாளத்தைத் துறக்க மேற் கொண்ட முயற்சிகளையும், துறந்த பின்னர் சமூகம் அவரை எதிர் கொண்ட முறைகளையும், சந்தித்த வன்முறைகளையும், நிராகரிப்புகளையும் உள்ளடக்கி எழுதியிருக்கும் இந்த தொகுப்பு, தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்.

வித்யாவின் வலைப்பதிவைத் தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும், அவரது பிறப்பு வளர்ப்பு தொடங்கி தற்போதைய வாழ்க்கை வரையிலான சம்பவங்களின் தொகுப்பை ஒட்டு மொத்தமாக வாசித்ததில் ஏற்பட்ட உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் கிடைக்க மறுக்கிறது.

சந்தேகாஸ்பதமான வினோதத்தலைப்புகள் கொண்ட ஏராளமான புத்தகங்கள் வெளியிட்டு வரும் கிழக்கு, பார்த்த உடனே வாங்கிப் படிக்கத் தூண்டும் அளவுக்கு இந்நூலைக் கொண்டு வந்ததற்காக நன்றி.

வித்யாவை வலைப்பதிவு உலகத்துக்கு இழுத்து வந்து, இது போன்றதொரு நூல் வெளிவரக் காரணமாக இருந்த பாலபாரதிக்கு நன்றி.

ரயிலில் செல்லும் போதோ, அல்லது வேறு எங்காவதோ திருநங்கைகள் வம்பு செய்வதைப் பார்த்தால், அது அவர்களுடைய தற்காப்புக்காகத்தான் என்பது இனி எனக்குப் புரியும். இந்த நூலை வாசித்தால் , உங்களுக்கும்.

G.N.B

gnb.jpg

ராம் ( லலிதாராம் ) எழுதிய ‘ இசை உலக இளவரசர் ஜி.என்.பி’ புத்தகத்தை வாசித்து முடித்தேன். ராம் பற்றி தெரியாதவர்கள், இந்த நூலை வாசித்தால், ஒரு ‘பெரியவர்’ க்டுமையாக உழைத்து எழுதியிருக்கிறார் என்று நினைப்பார்கள். இருபதுகளில் இருக்கும் ராமின் இசை அறிவு மிக ஆழமானது. சரமாரியாக வந்து விழும் தகவல் வெள்ளத்தில், மூழ்கி முத்தெடுப்பது, கர்நாடக இசை பரிச்சயம் இல்லாதவர்களுக்குச் சற்று சிரமம்.

சென்னை சங்கீத சபா வட்டாரங்களிலும், சினிமாவில் பாடியும் பிரபலமாக இருக்கும் ஜி.என்.பி, திருவையாறுக்குக் கச்சேரி செய்யச் செல்கிறார். ‘ சினிமாக்காரன் பாட்டுத்தானே’ என்று எகத்தாளம் பேசும் ரசிகர்களைக் தன் இசையால் கட்டிப் போடும் முதல் அத்தியாயத்தில் இருந்து இறுதி வரை அதே விறுவிறுப்புடன் செல்கிறது….

கர்நாடக இசை ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

மார்க்கெட்டிங் மாயாஜாலம் – அறிமுகம்


புத்தகங்கள் வாங்குவதில் நான் கடைபிடிக்கும் முக்கியமான உத்தி, உடனடியாக படிக்கத் தூண்டும் புஸ்தகங்களை மட்டும் வாங்கி, உடனடியாகப் படித்து விடுவது. குண்டு புஸ்தகங்களின் விலையில், அழகில் மயங்கி, வாங்கி, அலமாரியை ரொப்புவதில், உடன்பாடு இருப்பதில்லை. அப்படி, இந்த வருடம் செ.பு.க.காட்சியில், கிழக்கின் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்களில், என் டேஸ்ட்டுக்குத் தேறியவை மிக மிகச் சிலவே. D-60 இன் புதிய வெளியீடாக வந்திருக்கும், மார்க்கெட்டிங் மாயாஜாலம், ஒரு நல்ல புஸ்தகம் என்று சொல்வது understatement. இந்தப் புத்தகத்தை, துட்டு கொடுத்து வாங்கி, ஒரு மூலையில் உட்கார்ந்து பாராயணம் செய்தால், மார்க்கெட்டிங்கில் ஓஹோவென்று ஜொலிக்கலாம் என்று சொல்வது மிகை. ஆனால் ஏதாச்சும் சொல்லியே ஆகவேண்டும். என்ன சொல்வது?

படித்து முடித்ததும் எனக்குத் தோன்றிய முதல் அபிப்ராயம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, போட்டு பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் என்பதே. Extraodinary work. ஒரு இடம் கூட தொய்வடையாமல், buzzwords போட்டு போரடிக்காமல், நீள நீள அத்தியாயங்கள் இல்லாமல், சொல்ல வந்ததை, சுவாரசியமாகச் சொல்லி இருப்பது, இம்மாதிரி முயற்சிகளின் வெற்றிக்கு, மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் என்பது தெளிவாகப் புரிகிறது.

மார்க்கெட்டிங் என்பதை பற்றி, பாடபுத்தகங்கள் சொல்கிற அதே வழமையான விஷயங்கள், இங்கே அத்தியாயம் வாரியாக அலசப்படுகிறது, நாம் எளிதில் இனங்கண்டு கொள்ளக் கூடிய, பல லோக்கல் உதாரணங்களுடன். பல முக்கியமான உத்திகள் கூட, நமக்கு மிகவும் பரிச்சயமான, நிர்மா வாஷிங் பவுடர், சன் டீவி, ஹமாம் சோப், கவின் கேர் போன்ற பொருட்களை வைத்து உதாரணம் வழங்கப் படுகிறது. சில புத்தகங்களை அடிப்படையாக வைத்து எழுதாமல், தன்னுடைய மார்க்கெடிங் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களின் சாரத்தை, இதிலே இறக்கி இருக்கிறார்.

புத்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக நினைப்பது

* பிலிப் கோட்லர் துவங்கி, அத்தனை மார்க்கெடிங் தாதாக்களையும், இந்த புத்தகம் ஓரங்கட்டி விடும், கோடிக்கணக்கில் பணாம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் ஓவர் பந்தா விடாமல் இருந்தது.

* மக்கள் மனசில் இருக்கும் பிராண்டுகள், பொருட்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை மட்டுமே, உதாரணமாகக் காட்டி, சொல்கிற விஷயத்துடன் நம்மை உடனடியாக identify செய்ய வைப்பது. பல இடங்களில், ‘ அட ஆமா இல்லே…’ என்று எளிதில் ஆமோதிக்க வைப்பது.

* முக்கியமான சப்ஜெக்ட் பேசுகிறேன் பேர்வழி என்று, பக்கம் பக்கமாக, படங்கள், சார்ட்டுகள், புள்ளிவிவரப் பட்டியல் போட்டு, லேஅவுட் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருந்தது.

* பாட புத்தகங்கள் சொல்கிற அதே வரிசையில் , அடிப்படை விஷயங்கள் அனைத்தையும், கோர்வையாக, முன்னுக்குப் பின் முரண்படாமல் சொன்னது. tradition இல் இருந்து வழுவாமல் இருந்தது.

* பிற்சேர்க்கை, பிபிலியோகிரா·பி என்று மூன்று பக்கங்களுக்கு, புஸ்தகங்களின் பெயர்கள், இணையச் சுட்டிகளை அடுக்காமல் இருந்தது.

* சதீஷ¤க்கு, நகைச்சுவை உணர்வு அதீதமாக இருக்கிறது என்பது சில இடங்களில் புரிகிறது. ஆனாலும், எடுத்துக் கொண்ட விஷயத்தின் கனத்துக்கு மதிப்பு கொடுத்து, அமுக்கி வாசித்திருக்கிறார். அவரது இந்த ‘புரிந்துகொள்ளல்’ ஒரு இனிமையான ஆச்சர்யம்.

* நூலின் நோக்கத்தை முழுதுமாகப் புரிந்து கொண்டு, பல ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்த ரொம்பவும் மெனக்கிடாமல், அதே சமயம், அறிமுகமான தமிழ்ச் சொற்களுக்கு, ஆங்கில வார்த்தைகளைப் போட்டு படுத்தி எடுக்காமல், நன்றாக பேலன்ஸ் செய்திருப்பது.

நான் மார்க்கெட்டிங் பற்றி பாடபுத்தகங்களில் படித்தவனில்லை. trial & error மூலம் கற்றுக் கொண்டு, பயன் பெறுபவன். முழுமையாக, எல்லா விஷயங்களையும் தொட்டிருக்கிறாரா, கருத்துப்பிழைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.ஒரு வேளை மீனாக்ஸ் போன்றவர்கள், இன்னும் விளக்கமாக எழுதலாம். சோதனை முறையில் நான் தெரிந்து கொண்ட விஷயங்களை, பரிச்சயமான மொழியில், இணக்கமான நடையில், ஒரு விற்பன்னர் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளும் போது கிடைக்கும் நிம்மதி அலாதியானது. இந்நூல் அதை அளிக்கிறது.

இனியாவது, இப்படிப்பட்ட உருப்படியான புஸ்தகங்களைப் பிரசுரம் செய்யும் போது, தெலுங்கு டப்பிங் பட ஸ்டைலில், தலைப்பு வைக்க வேண்டாம் என்று கிழக்கிடம் கேட்டுக் கொள்கிறேன் இல்லாவிட்டால் நான் வடக்கிருக்க வேண்டியிருக்கும்.

இரா.முருகன் + சுஜாதா + அரசூர் வம்சம்

இந்த வாரக்குமுதத்தில் இருந்து… [சுஜாதா எழுதியது]

“… அண்மையில் என்னை இழுத்து வைத்துப் படிக்க வைத்த நாவல், இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’. தமிழ் நடையில் என்னுடைய பாதிப்பு பலரிடம் இருப்பதைக் கவனிக்கிறேன். முருகனின் தமிழ்நடையில் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களின் – ஜானகிராமன், புதுமைப்பித்தன், லா.ச.ரா. என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் எல்லோரையும் தன் கம்ப்யூட்டர் திறமை, ஆங்கில உத்திகள் சேர்த்து ஒரு புதிய தமிழ் நடையை உருவாக்கியுள்ளார். அவரது ‘அரசூர் வம்சம்’ நாவலின் 24-ம் அத்தியாயத்தின் சில பக்கங்கள் இங்கே. இதில் இருக்கும் seduction ஒவ்வொருவரும் வாழ்வில் எப்போதாவது சந்தித்திருக்கிறோம்.

***************

சாமிநாதன் நிறுத்தி நிதானமாக வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தான்.

வேதபாடசாலை வித்தியார்த்திகளுக்கு ஆக்கும் போது, இரண்டு அகப்பை அதிகமாகப் போட்டுச் சமைத்து எடுத்து வந்து வைத்துப் போய்விட்டாள் ராமலச்சுமிப் பாட்டி.

புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் சின்னக் குழந்தைக்கு நிலாக்காட்டி ஊட்டுவது போல் சாதுவான ரசமும், நெய்யுமாக அன்னம். புடலங்காய் பருப்பு உசிலி. அதில் இழைபடும் வெளுத்த தலைமுடி.

இந்தச் சாப்பாட்டை அவன் போன ஜன்மத்தில் சாப்பிட்டிருக்கிறான்.

ஓ அக்னியே. எங்கள் பிரார்த்தனையைக் கேள். மித்ரனோடும் ஆர்யமனோடும் உன் சிம்மாசனத்தில் வீற்றிரு. நீ இந்திரன் போல் வலிமையானவன். திவோதச மன்னன் உன்னைத் தொழுதான். இந்த மண்ணில் முதலில் அவதரிக்க நீ கருணை கூர்ந்தாய். பிறகு விண்ணேறினாய்.

சாம வேதத்தின் வரிகள் ஒலிகளாக அவன் காதுகளில் இரைந்து ஒலித்தன. அவன் தான் சொல்கிறான். சிரவுதிகள் அடியெடுத்துக் கொடுக்கிறார். அரணிக் கட்டையில் நெருப்பாகப் பிடித்துப் படர்ந்து பரவும் முழக்கம். கம்பீரமாக ஔ¤ர்கிற உடம்பு அவனுக்கு. அவனுக்குச் சிறகுகள் முளைக்கின்றன. அவன் வானத்தில் ஏறிக் கொண்டிருக்கிறான். இரண்டு பக்கமும் சிவப்புக் கொடி பிடித்து யாராரோ அணிவகுத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவனோடு பேச வந்தவர்கள். அவன் காலத்துக்கு ஏகமாகப் பின்னால் பிறந்தவர்கள். அவர்கள் காலத்துக்கு அப்புறம் இங்கே எல்லாம் மாறும். மனுஷ்யன் மகத்தானவனாவான். பிசாசுகள் வலுவிழந்து போவார்கள். தெய்வங்களும் தாம்.

அவர்கள் திடமாக நம்பினார்கள். அந்தக் காலம் வந்ததோ என்னமோ தெரியவில்லை சாமிநாதனுக்கு. ஆனாலும் அவர்களைப் பிரியத்துடன் பார்க்கிறான்.

அக்னியே, நீ என் கிரஹத்தின் அதிபதி. என் ஆகுதிக்குக் குருவாக இருந்து வழி காட்டு. எங்கள் குற்றம் குறையனைத்தையும் பொசுக்கிச் சாம்பலாக்கு. எங்கள் பாவங்களைச் சுட்டெறி. தவறு செய்யாதபடி எங்களைத் தடுத்தாட்கொண்டு வழி காட்டு.

எதுக்கு அதெல்லாம் சாமா? இப்படியே இருந்துடலாம்.

குருக்கள் பெண் பின்னால் இருந்து சாமிநாதனைத் தழுவிக் கொள்கிறாள்.

வேண்டாம் வசு. சாமவேதம் சொல்றேன் கேளு. இல்லே, அவாள்லாம் ஏன் சிவப்புக் கொடி பிடிச்சுண்டு போறா தெரியுமா?

எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்டா சாமா. உன்னோட உடம்பு மட்டும் போறும்.

வசு. வேணாம். சொன்னாக் கேளு. அக்னியே. நாசமாப் போச்சு. ஊஞ்சல்லே படுக்கணுமா?

சாமிநாதன் வாயில் முடி புரள்கிறது.

வசு. வசுமதி. வசு. பசு. சிசு.

அவள் சிரிக்கிறாள். அவன் மேலெ ஏறிப் படர்கிறாள். ஒரு காலால் தரையில் உந்தி உந்தி ஊஞ்சலை அந்தக் கோடிக்கும் இந்தக் கோடிக்குமாக ஆட்டுகிறாள். சாமாவுக்கு மூச்சு முட்டுகிறது. இந்த சந்தோஷத்திலேயே உயிர் போனால் நன்றாக இருக்கும்.

அதுக்கு இன்னும் நேரம் இருக்குடா கட்டேலே போறவனே. ரமிக்கலாம் வா. ஊஞ்சல் நிக்கக் கூடாது. ஆமா, சொல்லிட்டேன். குருக்கள் பெண் அதட்டுகிறதும் அவனுக்குப் போதையேற்றுகிறது.அவள் இரண்டு நாளாகக் கூடவே வளைய வருகிறாள். ராமலச்சுமிப் பாட்டி சாப்பாடு கொண்டு வரும்போது மடிசாரில் கச்சத்தை உருவி விட்டுச் சிரித்தாள். கிழவி தன்னிச்சையாக நடந்ததாக நினைத்துக் கொண்டு, புடவையை வாரிச் சுருட்டியபடி நாணிக் கோணி வௌ¤யே போனாள்.

ஐயணை பகலில் ஒரு தடவையும், ராத்திரி விளக்கு வைத்ததும் இன்னொரு தடவையும் உள்ளே வந்து சாமிநாதனை சௌகரியம் விசாரிக்கும்போது அவன் முதுகில் காலால் உதைத்தாள். ஆனாலும் ஐயணை அசரவில்லை.
அய்யர் வீட்டுப் பொண்ணாச்சேன்னு பாக்கறேன். இல்லே எங்க முனியாண்டிக் கருப்பனை விட்டு உன்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவேன்.

அவன் புஜத்தில் தட்டிக் கொண்டு சொல்லும்போது குருக்கள் வீட்டுப் பெண் பயந்து போய் சாமாவின் தோளைக் கட்டிக் கொண்டாள்.

சாமி, இந்தப் பீடையைச் சீக்கிரம் தொலைச்சுத் தலைமுழுகுங்க. நல்லபடியா தம்பி மாதிரிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சுபிட்சமா இருங்க. அவன் வௌ¤யே போனதற்குப் பிற்பாடு அவள் சாமிநாதன் மடியில் உட்கார்ந்து சிரிக்கச் சிரிக்க என்னென்னமோ காட்சி எல்லாம் தெரியப் படுத்தினாள். சுப்பம்மாளின் வாயை வௌ¢ளைத் துணியால் கட்டி மாட்டு வண்டியில் கூட்டிக் கொண்டு போகிறார்கள். சுந்தர கனபாடிகள் வைகையில் குளித்துவிட்டுக் கௌபீனத்தோடு, வேட்டியை உலர வைத்துக் கொண்டு நிற்கிறார். ஒரு பிராமணன் கூவிக் கூவி அழைத்துச் சித்திரான்னம் விற்கிறான். கொலு பொம்மை வர்ணத்தில் முண்டாசு அணிந்த மாட்டுக்காரன் களிமண் பசுவை ஓட்டிப் போகிறான். அப்புறம் ஒரு கிழவன் அரைக் கண்ணை மூடிக் கொண்டே மிதந்து வந்து நின்றபடியே அற்ப சங்கை தீர்த்துக் கொள்கிறான். பாதம் நனைய நனையச் சிரித்துக் கொண்டு வெய்யில் தாழ்ந்த தெருவில் மரத்திலும், மச்சிலும் இடித்துப் புடைத்துக் கொண்டு மிதந்தபடி போகிறான். சங்கரனுக்கு முன்னால் கால் மடக்கி உட்கார்ந்து ஒரு சின்னப் பெண் கீர்த்தனம் பாடிக் கொண்டிருக்கிறாள்.

குருக்கள் பெண் தரையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

சுப்பம்மா அத்தை வாயை என்னத்துக்குக் கட்டி வச்சிருக்கு?

சாமிநாதன் குருக்கள் பெண்ணின் காலை இழுத்து மாலையாகத் தோளில் போட்டுக் கொண்டு கேட்டான். குருக்கள் பெண் சொன்னாள். சாமிநாதன் சிரித்தான். அவன் முழுக்கச் சிரிப்பதற்குள், படுத்துக்கலாம் வா என்றாள் அவள் மறுபடியும். அந்தக் கிழவன். அந்தரத்தில் மிதந்து கொண்டு.

சாமிநாதன் விசாரித்தபோது குருக்கள் பெண் தெரியாதென்றாள். எல்லாத்துக்கும் காரணம் சொல்ல முடியுமா என்ன? நீ கூப்பிட்டு நான் ஏன் வந்தேன்? நாம ஏன் இப்படி பட்சி மாதிரி, பசு மாதிரி இதுமட்டும் தான் எல்லாம்னு சதா கிடக்கோம்?

சாமிநாதனுக்கும் புரியவில்லை. புரிந்து என்ன ஆக வேண்டும்? குருக்கள் பெண் சமையல்கட்டுக்குள் நுழைந்தாள். சாமிநாதன் கூடவே போனான்.

இங்கேயுமா?

ஏன்? இந்த இடத்துக்கு என்ன? மொறிச்சுன்னு பசுஞ்சாணி தௌ¤ச்சு சுத்தம் பண்ணி இருக்கு. ஜில்லுன்னு தரை வா வாங்கிறது பாரு. வா. அவன் மனசே இல்லாமல் உட்கார்ந்தான். உடம்பு எல்லாம் வலித்தது. அக்னி எப்போதோ கூப்பிட்டதை நினைவு வைத்துக் கொண்டு வந்து அவன் இமைகளில் சட்டமாக உட்கார்ந்து தகித்தது.
ராட்சசி கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டு கண்ணயரலாம். அயர்ந்த அப்புறம்? வாடா எங்கே ஓடறே படுவா? இங்கே பாரு, சமையல் கட்டுக்குப் பக்கமா அரிசி மூட்டை மேலே ஆத்துக்காரியைக் கிடத்தி.

எனக்கு ஒண்ணும் பார்க்க வேண்டாம்.

எல்லாம் உன் தம்பி கல்யாணம் செஞ்சுண்டு வர சம்பந்தக்காரா தான். இந்தக் கிழவனைப் பார்த்தியோ? தம்பதி ஜோடி சேரும்போது இப்படியா உள்ளே வந்து புட்டத்திலே இடிச்சிண்டு போவான்? சிரிக்கறியாடா? சிரி. உன் மேலே இடிச்சுண்டு போனா சிரிக்க மாட்டே நீ?

அவன் எதுக்கு எனக்கு? நீ ஒரு பிசாசே போறும்டீ. அவள் ஆலிங்கனத்தில் சாமிநாதன் காலுக்குக் கீழே தரை நழுவ இருட்டில் அமிழ்ந்து கொண்டிருக்கிறான். சாமி, இந்தப் பொம்பளை சகவாசம் வேணாம். சொன்னாக் கேளுங்க.
ஐயணை வீட்டுக்குள் காவல் தெய்வம் போல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு சொல்கிறான். அவன்
பீஜத்தில் ஓங்கிப் பட, குருக்கள் பெண் ஊஞ்சலை ஆட்டி விடுகிறாள். ஐயணையின் வசவுக்கு சாமிநாதனுக்கு அர்த்தம் புரிபடவில்லை.

மாடிக்குப் போலாம் வாடா. அவள் கூப்பிடுகிறாள்.

ஏன், உள்வீடு எல்லாம் அலுத்துப் போச்சா அதுக்குள்ளேயும்? இப்பவே போனாத் தான் தயாரா இருக்கலாம்.

எதுக்கு?

எது நடக்குமோ அதுக்கு. யார் யார் காலையோ பிடிச்சுக் கெஞ்சிப் பார்த்தேன். எந்தத் தேவிடியாளும் கை கொடுக்க மாட்டேங்கிறாடா பிரம்மஹத்தி.

நீ என்ன கேட்டே? அவா என்ன சொன்னா?

மாடி ஏறிக் கொண்டிருந்த குருக்கள் பெண்ணை இடுப்பைப் பிடித்து இழுத்துத் தலையைத் திருப்பி முத்தினான் சாமிநாதன். அவள் வாயில் மாமிச வாடை வந்தது.

இதெல்லாம் சாப்பிடுவியாடீ நீ? விட்டா நான். அவள் சுட்டிக்காட்ட அவன் அரையைப் பொத்திக் கொண்டு உரக்கச் சிரித்தான்.

வேஷ்டி எங்கேடா கடன்காரா? அவள் கேட்டாள். அது ஊஞ்சலில் பப்பரவென்று கிடந்தது. நீ மட்டும் ரொம்பப் பதவிசா உடுத்திண்டதா நினைப்போ? நான் உனக்கு நூறு இருநூரு வருஷம் முந்தினவடா கழுதே. அப்ப ஏண்டி கூட வந்து படுத்தே? உனக்கு கொள்ளுப் பேரன் எள்ளுப் பேரன் இல்லியாடி நான்?

நீ தாண்டா கூப்பிட்டே என்னை. நான் பாட்டுக்கு எங்கேயாவது தெவசச் சோறு கிடைக்குமான்னு இங்கே நொழஞ்சேன். நம்மாத்துப் பொண்டுன்னு அந்தப் பரதேவதை எல்லாம் சும்மாக் கிடக்க, பொழுது போகாம நான் மாடிக்கு ஏறினா, நீ என்னடா பண்ணினே அயோக்கியா?

இதுதான்.இதேதான்.

சாமிநாதன் அவளுக்குள் ஒடுங்கிக் கொண்டான். இப்படியே இந்த இருட்டில், பழுக்காத் தட்டுக்களைச் சுழல வைத்துக் கொண்டு எல்லாச் சோகத்தையும் கேட்டு அனுபவித்துக் கொண்டு, வௌவால் வாடையும், புகையிலை வாடையும் காற்றில் கவியக் காலமும் நேரமும் தெரியாமல் கரைந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போய்விட வேண்டும்.

அக்னியே. நீ வரவேண்டாம். நானே தூசியாக எங்கேயும் ஒட்டாமல் உதிர்ந்து விடுகிறேன். உனக்கு என் நமஸ்காரங்கள். அக்னியே உன் வாய்க்கும் ஒரு பெயர் உண்டு. ஜூஹ¥. எங்கள் பிரார்த்தனைகளைத் தேவதைகளுக்குக் கொண்டு போ. என்ன பிரார்த்தனை? வசுவோடு ராத்திரி முழுக்க இணங்கிக் கிடக்கணும். அவ்வளவுதான்.