பல வருடங்களாக சல்லடை போட்டு சலித்துத் தேடிய படம். கிடைத்ததும் உடனே பார்த்து விட்டேன்.
கடந்த முப்பது வருடங்களாக, இப்படத்துக்குத் திரைக்கதை எழுதிய வெங்கட் சுவாமிநாதன் துவங்கி, ரெண்டாவது இஷ்யூவிலேயே இழுத்து மூடிய சிற்றிதழ் எழுத்தாளர் வரை கழுதை குறித்து, அவரவர் கோணத்தை எழுதியாகிவிட்டார்கள். புதுமைச்சிற்பி ரா.பார்த்திபனுக்கு வாரிசாக விரும்பும் ‘யுவர்ஸ் ட்ரூலி’ க்கு இந்த ஏரியாவிலே ஸ்கோப் குறைச்சல் என்பதால், ஒரு வித்தியாசத்துக்கு, படத்தின் கதையை, பார்த்த போது கண்களுக்கு அகப்பட்டதை பற்றி – உள்ளுறை உவமம் அல்ல – மட்டும் எழுதுகிறேன். [ படத்தைப் பார்க்கும் பொழுது, கண்கள் எதையோ பார்க்க, மனதுக்குள் விரியும் படிமங்களை, வார்த்தைக்குள் சிறைப்பிடிப்பது அத்தனை எளிதாக இல்லை என்பதால், இந்த எஸ்கேப் ரூட்]
தொடர்பில்லாத இடைச்செருகல் ஒன்று : பாராளுமன்றத்துக்குள் ஒரு முறை, எருமை மாடு ஒன்று நுழைந்து விட்டது. உடனே எதிர்கட்சி அன்பர் எழுந்து சபாநாயகரிடம் முறையிட்டார்.
லயோலா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக இருக்கும் நாராயணசுவாமி ( எம்.பி.ஸ்ரீனிவாசன்) , வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது, அனாதையாக நிற்கும் ஒரு கழுதைக் குட்டியைப் பார்த்து, அன்பு மேலீட்டில், தன் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கிறார். ஒரு ஆசாரமான பிராமணர், கழுதை வளர்ப்பதாவது, என்று அக்கம் பக்கத்தில் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல், அதற்கு சின்னா என்று பெயரிட்டு, நாய், பூனை, கிளி போன்ற அழகான ஐந்தறிவு சீவன்களைப்போலவே வளர்க்கிறார். இந்த செய்தி, அவரது கல்லூரி வரை பரவி, மாணவர்கள், எக்கச்சக்கமாகக் கிண்டல்
செய்கிறார்கள். நாராயணின் கண்களில் படுமாறு கேலிச்சித்திரம் வரைந்து, கழுதை போலக் கனைத்து அவமானப்படுத்துகிறார்கள். கல்லூரியில் ஒரு விதமான unrest சூழல் உருவாவதை உணார்ந்து, கழுதையுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ளச் சொல்லி, கல்லூரி முதல்வர் வற்புறுத்துகிறார்.
” Professor Narayanaswami, I want to talk to you something. About your donkey.”
” You know about my donkey, father?”
” Why only me? The whole college is talking about it. Have you not seen the posters put up by the students all over the college? You are becoming a joke for the students”
“Well, father. let the young boys have some fun. What if at my expense?”
” Please, Mr.Narayanaswami, you are the senior most professor here. and this is demoralising our instituition. Please do something”
” Father, this is a very personal matter, as far as i am concerned. But if it is demoralising to our institution, please give me two days leave. I shall take the donkey to my village, to my home, and leave it there.
” thank you Mr.Professor.”
இப்படியான ஒரு சிறு வாக்குவாதத்துக்குப் பிறகு, புரபசர், சின்னாவை ஒரு கூடையில் அழகாகப் பேக் செய்து, தன்னுடைய சொந்த ஊருக்கு பஸ்ஸில் வைத்து அழைத்துச் செல்கிறார். அது ஒரு குக்கிகிராமத்து அக்கிரகாரம். 60 களின் கதைகளில் வருவதைப் போன்ற உதாரண பிராமணக் கதாபாத்திரங்கள். புரபசர், தன்னுடைய அப்பா அம்மாவிடம், சின்னா, வீட்டிலேயே இருக்கட்டும், தான் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி, சின்னாவைப் பார்த்துக் கொள்ள, அந்த ஊரில் இருக்கும் ஒரு வாய்பேச முடியாத பெண்ணை ஏற்பாடு செய்கிறார். புரபசரின் அம்மாவுக்கு, இப்படி, வீட்டில், ஒரு கழுதையை வைத்து வளர்ப்பது பிடிக்கவில்லை. என்றாலும், புரபசரின் அப்பா, ‘ அவன் செய்யறதுல ஒரு அர்த்தம் இருக்கும் ‘ என்று சொல்லி மனைவியை அடக்குகிறார்.
தொ.இ – இரண்டு : உள்ளே நுழைந்த எருமை மாட்டை வெளியேற்ற வேண்டும் என்று முறையிட்டார். உடனே அதற்கு ஆளுங்கட்சி அன்பர் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தார்.
சில மாதங்கள் கழித்து, ஊருக்கு வரும் பொழுது, புரபசரின் அப்பா, சின்னான், அந்த அக்கிரகாரம் முழுக்க, சின்னா செய்த கலாட்டாக்களை வருத்ததுடன் சொல்கிறார். ஒருவர் வீட்டு பெண்பார்க்கும் படலத்தில் நுழைந்து கலைத்துப் போடுகிறது. இன்னொருவரின் வயசான அம்மாவை முட்டி மோதி
விடுகிறது. ஆனால், இந்த கலாட்டாக்களுக்கு சின்னா காரணமல்ல, அனைத்தும்,
சின்னாவை வைத்து, அந்த அக்கிரகாரத்து விடலைகள் செய்யும் குறும்பு என்பது காட்சிகள் மூலமாக பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மௌனமாகக் கேட்டுக் கொள்கிறார் புரபசர். அக்கிரகாரத்து வாசிகள், சின்னாவின் கலாட்டாக்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வண்ணாந்துறையில் இருக்கும் துணி தோய்க்கும் தொழிலாளிகளிடம், அழைத்துக் கொண்டு போகச் செய்துவிடுகிறார்கள். புரபசர், அவர்களிடம் சென்று பணம் கொடுத்து சின்னாவை மீட்டு, அந்தப் பெண்ணிடமே ஒப்படைத்துவிட்டு ஊருக்குக் கிளம்புகிறார்.
அந்த ஊமைப் பெண்ணுக்கு, ஊரின் ஒதுக்குப் புறத்த்தில் இருக்கும் ஆடவன் ஒருவனுடன் உறவு ஏற்படுகிறது. அவன் கூலி வேலை செய்கிற தலித் இளைஞன். அவர்களுக்குள் நிகழ்வது காதல் அல்ல. அவர்களிருவருக்கும் உறவு ஏற்படும் விதம் வினோதமானது.
முதலில் அவன், அந்தப் பெண்ணைத் பின் தொடர்ந்து , அவள் கையைப் பிடிக்கிறான். கடும் கோபத்துடன் அவள், கையைத் தட்டிவிட்டுச் செல்கிறாள். அடுத்த காட்சியில், அவன் அதையே
செய்யும் பொழுது, அவள் எதிர்ப்பு சற்றே தளர்ந்திருக்கிறது என்பதை, அவளுடைய மிட் க்ளோசப் கண்கள் காட்டுகின்றன. மூன்றாவது காட்சியில், அவள் எதிர்ப்பு மனோபாவத்தை முற்றிலுமாகக் கைவிட்டு அவன் பின்னால் செல்கிறாள். ஒரு ஆளரவமற்ற பாழடைந்த கோயிலில் சல்லாபிக்கிறார்கள்.
தொ.இ – மூன்று : எதிர்ப்பு தெரிவித்தவர், எதிர்க்கட்சி அன்பர் சொல்வதிலே பிழை இருப்பதாகவும், நுழைந்தது எருமை மாடல்ல, பசு என்று ஆணித்தரமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்.
இந்த உறவின் மூலமாகக் அவள் கர்ப்பம் அடைகிறாள். ஆனால் அந்த ஆடவன் இதற்குப் பிறகு எங்கும் தென்படுவதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அவளுக்குக் குழந்தை பிறந்து , உடனே மரிக்கிறது. அந்தப் பெண்ணின் தாய், மரித்த சிசுவை, துணியில் சுற்றி எங்கோ கொண்டு போய் போட்டுவிடுகிறாள். அடுத்த நாள் காலையில், அந்தச் சிசு, கோயில் வாசலில் துணி சுற்றிக் கிடப்பதைப் பார்த்து, கோயில் குருக்கள், அக்கிரகாரத்துவாசிகளிடம் முறையிடுகிறார். எல்லோரும் கூடிப் பேசி, இந்தக் குழந்தை, அந்த ஊமைப் பெண்ணுக்குப் பிறந்ததாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து, அந்தப் பெண்ணின் தாயைக் கூப்பிட்டு விசாரிக்கிறார்கள்.
அவள், தனக்கு எதுவும் தெரியாது, அந்தக் கழுதைதான் இப்படிச் செய்திருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறாள். இனி, அந்தக் கழுதையை உயிரோடு விட்டுவைத்தால் பிரச்சனைதான் அதிகமாகும் என்று முடிவு செய்து, கூலி வேலைசெய்யும் தலித் இளைஞர்களை அழைத்து, அந்தக் கழுதையைக் கொன்றுவிடும் படிக் உத்தரவிடுகின்றனர். சின்னாவும் கொல்லப்படுகிறது.
சின்னான் இறந்த சில நாட்களிலேயே, அக்கிரகாரத்துக்கு வெளியே, சிலர், சின்னானைப் பார்த்தாகச் சொல்ல, அது ஒரு தெய்வாம்சம் பொருந்திய கழுதையாக இருக்கலாம் என்று அக்கிரகாரத்தில் பேச்சு கிளம்புகிறது. அதற்கு ஏற்றார் போல, சில நல்ல விஷயங்களும் – ஓடிப்போன ஒரு மகன் திரும்ப வருகிறான், நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த புரபசரின் தம்பி மனைவி தாய்மை அடைகிறாள் – நடந்து, அக்கிரகாரத்துக்கு வந்த கழுதை நிச்சயம் ஒரு தெய்வாம்சம் பொருந்தியது என்று முடிவு செய்கிறார்கள்.
அடுத்த முறை, அக்கிரகாரத்துக்கு வரும் புரபசரிடம், ஊர் விடலைகள், நடந்த கதை அனைத்தையும் சொல்கின்றனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிறார். குழந்தையையும், சின்னாவையும் ஒரே நேரத்தில் இழந்த அந்த ஊமைப் பெண் எங்கே என்று விசாரிக்கிறார். தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, கண்களில், வெறுப்பா, கோபமா, வருத்தமா, சோகமா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் தனியாக அமர்ந்திருக்கும் அந்த்ப் பெண்ணின் தோளை ஆறுதலாகத் தொடுகிறார்.
ஒரு சில நொடிகள் தான்.
திரும்பி நடந்து அக்கிரகாரத் தெருவில் நடக்கும் பொழுது, சின்னாவின் தெய்வச் செயல்கள் குறித்து, பேசிக் கொண்டிருக்கிறார்கள். சின்னாவுக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.
ஊமைப் பெண்ணும், புரபசரும் சின்னாவின் மண்டையோட்டைத் தேடியெடுக்கும் பொழுது, அதை, அந்த இளைஞர்கள் வந்து வாங்கிக் கொள்கிறார்கள்.
அந்த மண்டையோட்டை நடுவில் வைத்து, ஆக்ரோஷமாக ஆடுகிறார்கள். பின்னணியில் பாரதியின் வரிகள், எம்பி ஸ்ரீனிவாசனின் குரலில் ஒலிக்க, படம் நிறைகிறது.
தொ.இ – நான்கு : நுழைந்தது எருமையா, பசுவா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு, ஓட்டெடுப்பு நடந்தது. சபாநாயகர், சபைக்குள்ளே வந்தது, எருமை மாடல்ல , பசு மாடே என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தார்.