Prakash’s Chronicle 2.0

‘bijines’ பகுப்பில் உள்ள வரவுகள்

கைக்கு எட்டிய சிக்கன் பகோடா…..

நவம்பர் 8, 2009 · 11 மறுமொழிகள்

மழை விட்டிருந்தது.

காலையில் இருந்து வீட்டிலேயே அடைந்து கிடந்தது என்னவோ போல் இருக்க, அரைக்கால் டவுசரை மேலும் சுருட்டிக் கொண்டு நடை நீச்சல் அடித்துத் தெரு முனைக்குச் சென்றேன். வழக்கமாக இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ், நேற்று, எட்டரை மணிக்கெல்லாம் மூடப்பட்டு, கடை வாசலிலே, உரிமையாளர் , அவரது தம்பி, மேலும் இருவர் கும்பலாக நின்று கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

கையில், ஆளுக்கொரு இலை வைத்து, பக்கோடா போன்ற எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும்,

‘ அடடே வாங்க சார்… மழைனால கடைய சீக்கிரம் மூடிட்டோமே’

தன் தம்பியைப் பார்த்து, ‘ டேய், வீட்லேந்து சார்க்கு ஒரு கிங்ஸ் பாக்கட் எடுத்துட்டு ஓடியா’ என்றதும்,

நான், ” இல்ல இல்ல, ஸ்டாக் இருக்கு, வேண்டாங்க” என்றேன்.

உரிமையாளரின் தம்பி, கையில் இருந்த மந்தார இலையை நீட்டி, எடுத்துக்கங்க என்றார். இலையில் இருந்தது சிக்கன் பகோடா.

உடனே, கடை உரிமையாளர், தன் தம்பியை சட்டென்று கடிந்து கொண்டார்.” தம்பி, அவங்க அதல்லாம் சாப்ட மாட்டாய்ங்க.”, ” சார், அவனுக்குத் தெரியாது. நீங்க போங்க, “

கைக்கு எட்டிய சிக்கன் வாய்க்கு எட்டாமல் போன கடுப்பை விட ஆச்சர்யமே மேலோங்கியெது.

நாங்கள் வசிக்கும் ஏரியாவிலே, சாதி, குலம் கோத்திரம் போன்ற விவகாரங்கள் எளிதிலே மற்றவர்களுக்குத் தெரிந்துவிடாது. அனைவருமே, அனைவரிடத்துலே ஒரு safe distance காப்பது வழக்கம். இவருக்கு மட்டும் எப்படி ‘ சாப்டுவாங்க’, சாப்பிடமாட்டங்க’ என்ற விவரங்கள் தெரிந்திருக்கும் என்று சஸ்பென்ஸ் தாங்கவில்லை.

கேட்டே விட்டேன்.

‘ என்ன சார், உங்க வீட்லந்து ஒரு வாட்டி கூட நம்ம கடைல முட்டை வாங்கினதே இல்லியே, அப்ப, நீங்க சைவம் தானே’

எத்தனை ரிலையன்ஸ் ஃப்ரஷ் , ஸ்பென்ஸர்ஸ் டெய்லி வந்தாலும், நம்ம அண்ணாச்சிக் கடைகளை இடம் பெயர்க்கவே முடியாது என்று சிலர் சொல்வதன் அர்த்தம் புரிந்தது.

பகுப்புகள்: Personal · bijines
குறிச்சொற்கள்: ,

16 Useful Tips for Entrepreneurs

December 26, 2007 · 5 மறுமொழிகள்

மா.சிவக்குமார் எழுதிய பதிவின் தாக்கத்தில் மற்றும் அதன் தொடர்ச்சியாக….

- எல்லாப் பொருள் / மற்றும் சேவைகளுக்கும் தேவை என்ற ஒன்று இருக்க வேண்டும். அல்லது தேவையை உருவாக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். கூல் ஐடியா என்றால், உடனே வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிடக்கூடாது. உதாரணமாக உங்களுக்குக் கிச்சிலிக்காய் ஊருகாய் பிடிக்கும், ஆனால், சென்னையில் எங்கும் கிடைக்கவில்லை என்றால், உடனே கிச்சிலிக்காய் ஊருகாய்க்கு சென்னையிலே மார்க்கெட் இருக்கிறது என்று இருந்த இடத்தில் இருந்தே முடிவுக்கு வந்து விடக் கூடாது. விசாரிச்சுப் பார்த்து, ஒர்க் அவுட் ஆகும் என்றால் மட்டுமே செய்ய வேண்டும்.

- என்ன வேணும் என்று கஸ்டமரைக் கேட்காதீர்கள். கேட்டாலும், அவர்கள் என்ன தேவை என்று சொல்கிறார்களோ அதைத் தராதீர்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுங்கள். ஹென்ரி ஃபோர்ட் ஒருமுறை சொன்னார், ‘ If I’d asked people what they wanted, they would have asked for a better horse. ‘. என்ன வேணும்னு கேட்டா கூகிள் நமக்கு ஜிடாக்கையும், ஜிமெயிலையும் தந்தாங்க? பயனர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நாமாகச் செய்து கொடுத்தால், சந்தோஷமாக வாங்கிக் கொள்வார்கள்.

- நிறுவனத்துக்கு, அம்மா / அப்பா / சம்சாரம் / நாய்க்குட்டி பெயரை எல்லாம் வைக்காதீர்கள். நீங்க தனி, நிறுவனம் தனி. அப்படிப் பிரிச்சுத்தான் பார்க்கணும். அப்படி இல்லை என்றால், எவ்வளவு நஷ்டம் வந்தாலும் இழுத்து மூடத் தோன்றாது, செண்டிமெண்ட் காரணமாக.

- நிறுவனத்தை மொத்தமாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்க மார்க்கெட்டிங் விற்பன்னராக இருந்து, தொழில் முனைவராக ஆகியிருந்தால், மார்க்கெட்டிங்க்குக்கு பட்ஜெட்ல அதிகமா ஒதுக்க கை துறுதுறுக்கும். செய்யாதீங்க. உற்பத்தி, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட எல்லாத்துக்கும் சமமான முன்னுரிமை கொடுக்கத் தெரியணும். வேற ஒரு அலுவலகத்துல வேலை செய்யும் போது நிலைமை வேறயா இருந்திருக்கும். ப்ரொடக்ஷன் எக்கேடு கெட்டா எனக்கென்ன, எனக்கு வேணுங்கறதக் கொடுத்தாத்தான் சேல்ஸ் வேலை ஒழுங்கா நடக்கும்னு, துறைத் இன்சார்ஜ் என்கிற முறையிலே பாஸ் கிட்ட சண்டை போடலாம். இங்க அந்த சொகுசு கிடைக்காது.

- சொந்தக் காசு எது, கம்பெனி காசு எது என்பதில் தெளிவு வேண்டும். அலுவலக வாடகை குடுக்க, அம்மா நகையை அடகு வைக்கறதும் தப்பு. நண்பர்களோட பார்ல உக்காந்து கும்மாளம் அடிச்சுட்டு, அந்தக் பில்லை கம்பெனி கணக்கிலே சேர்க்கிறதும் தப்பு.

- வரவு செலவுக் கணக்குக்கு ஒழுங்கு முறையான சிஸ்டம் அவசியம். spreadsheet பயன் படுத்தாதீர்கள். அது சார்ட் போட மட்டுமே. எல்லாச் செலவுகளையும் planned / unplanned expediture என்ற வகையில் பிரிக்கிற மாதிரி வைத்துக் கொள்ளுங்கள்.

- தனிமனிதராக உங்களுக்கு இருக்கும் குணாதிசயங்களை நிறுவனத்தின் மீது ஏற்றிவிடக்கூடாது. அதாவது, வீட்டுக்கு ஃபர்னிச்சர் வாங்கும் போது, விலை அதிகமான ப்ராண்டட் பொருட்கள் தான் வாங்கித்தான் பழக்கம், என்றால், ஆபீசுக்கும் அதே போல, நாலாயிரம் ரூபாய் குடுத்து நாற்காலி வாங்கக் கூடாது.

- செலவினங்களைக் ப்ரொஜெக்ட் பண்ணும் போது தாராளமாகவும், விற்பனையை ப்ரொஜெக்ட் பண்ணும் போது சிக்கனமாகவும் இருங்கள்.

- நீங்க ஒரு டெக்னோக்ராட்டாக இருந்தால், நீங்க செய்கிற பொருளின் ப்ராஸஸ் சிக்கலாக இருக்கலாம். ஆனால், பயனரைச் சென்று அடைகிற பொருள், அதிக விளக்கம் தேவைப்படாத அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டும். செய்கிற சிக்கலான வழிமுறைகள் பற்றி , பயனர்களிடம் நீட்டி முழக்க வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் உபயோகத்தைப் பற்றிச் சொன்னாலே போதும். உதாரணமாக, ஒரு சிக்கலான அல்காரிதம் மூலமாக, அற்புதமான ஒரு நிரல் செய்திருக்கிறீகள் என்ற காரணத்துக்காக, ஒரு சாஃப்ட்வேரை யாரும் வாங்கவோ, உபயோகிக்கவோ மாட்டார்கள். ‘ இத வெச்சுகிட்டு நான் என்ன செய்யறது? ” என்ற கேள்விக்கு பதில் கிடைத்தால் தான் பப்பு வேகும்.

- எதை அமுக்கி வாசிக்க வேண்டும், எதை பீற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரியவேண்டும்.

- ஒரு வேலை செஞ்சுட்டு, தொழில் முனைவராக ஆகியிருந்தால், பழைய கொலீக்ஸ் எல்லாம் சந்தர்ப்பம் கிடைச்சா ‘ ஏண்டா இந்த வேண்டாத வேலை’ ன்னு வெறுப்பேத்துவாங்க. அதையே போட்டு உளப்பிட்டு இருந்தா, வேலை நடக்காது.

- ஒரே ஒரு ப்ராடக்ட் / ஒரே ஒரு சர்வீஸ் கம்பெனி வேலைக்கு ஆகாது. உதாரணத்துக்கு எஸ்டிடீ பூத் வெச்சா, கூடவே செல்போன் விற்பனை செய்யலாம். கணிணி சர்வீஸ் பண்ற தொழில் தொடங்கினா, யூபிஎஸ் ஏஜென்சி எடுத்து, விற்பனை செய்யலாம். ஷாம்பூ பாக்கெட் தயாரிச்சா, கூடவே, தேங்கா எண்ணையையும், அதே போல சாஷேயில் அடைச்சு விக்கலாம்.

- எதிர்பாராம நடக்கக் கூடிய விஷயங்களுக்கு என்று ஒரு contingency plan அவசியம். நாலு லட்ச ரூபாய்க்கு ஒரு ரிஸ்க் எடுத்தால், அதிலே பிரச்சனை வந்தா எப்படிச் சமாளிக்கிறதுன்னு நல்லா யோசிச்சு வெச்சுகிட்டு இறங்கணும். நட்டத்தில் மூடப்படுகிற பெரும்பான்மையான நிறுவனங்கள், இப்படி எதிர்பாராத சிக்கல்களால் மூடப்பட்டவைதான்.

- கஸ்டமரோ, முதலீட்டாளரோ , வேறு முக்கியமான யாரோ, வேகமா ‘ யெஸ்’ ன்னு சொன்னா, அதுக்கு நோ ன்னுதான் அர்த்தம். அப்படியே ‘எக்செலண்ட்’ ன்னு சொன்னா, குப்பை ன்னு அர்த்தம்.

- அலுவலகத்தில் நியமிக்கும் பெண்களிடம் கண்ணியமாகப் பழகுங்கள்.

- நிறுவனத்தின் ownership மீது அதிக அளவு ஈடுபாட்டுடன் இருக்காதீர்கள். தேவையான அளவுக்கு உதவி கிடைக்கும், ஆனால், கணிசமான அளவு பாத்தியதையை விட்டுத் தரவேண்டும் என்றால், தயக்கமில்லாமல் ஒத்துக் கொள்ளுங்கள்.

[ இதல்லாம் சொந்த அனுபவத்துலேந்து சொன்னது. இதை கடைபிடிக்கிறது மூலமா ஏற்பட கூடிய நஷ்டங்களுக்கு ஈடு தர முடியாது, ஆனால் லாபங்களில் பங்கு தந்தால் ஏற்றுக் கொள்ளப்படும் :-) ]

பகுப்புகள்: bijines

நாராயணமூர்த்தி நாடாள வந்தால் நாடு தாங்குமா?

April 22, 2007 · 11 மறுமொழிகள்

திடீரென்று ஏதோ ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அங்கே கோட் சூட் அணிந்த கனவான்கள் நாலைந்து பேர் வட்டமாக அமர்ந்து, நாராயண மூர்த்தி, அடுத்த குடியரசுத் தலைவராக வரலாமா கூடாதா என்று விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அவுட்லுக்கின் வினோத் மேத்தா தவிர மற்ற யாரையும் அடையாளம் தெரியவில்லை.விவாதத்தின் போக்கு, நாராயணமூர்த்தி அவர்களுக்குச் சாதகமாகவே இருந்தது. ஸ்க்ராலிலே, நாராயணமூர்த்தி, தலைவராக வருவதற்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள், பங்கு பெற்ற நேயர்கள்.

இந்த அபிப்ராயம் எங்கேயிருந்து துவங்கி இருக்கும் என்று புரியவில்லை. ஒரு வேளை, அவ்வப்போது, அரசாங்கத்தை விமர்சித்து அறிக்கை விடுகிறார் என்பதால் இருக்குமோ? அல்லது, இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனத்தை வைத்து நடத்துகிறவருக்கு, இந்தியாவை கட்டிமேய்க்கத் தெரியாதா என்று ஊடகங்கள் நினைத்திருக்கலாம். அல்லது ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்ததும் ( இருந்ததாகச் சொன்னதும்), பின்னாளின் மனம் திருந்தி முதலாளியானதும், இந்து சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதும், காங்கிரஸ், வலது சாரி, இடது சாரி பெருந்தலைகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்க வகையில்லை என்பதாக இருக்குமோ? will you become a president ? என்று பிரணாய் ராய் கேட்ட கேள்வியை, ஊதி ஊதிப் பெருசாக்கி, இன்றைக்கு, அனேகமாக, அடுத்த ஜனாதிபதி நாராயண மூர்த்திதான் என்று நினைக்க வைத்த ஊடகங்களின் பலம், எனக்கு வியப்பு ஏற்படுத்தவில்லை, மாறாக அச்சத்தையே தருகிறது.

********

தனிப்பட்ட நோக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எந்த அரசியல் பதவி மீதும் எனக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. குறிப்பாக, ஜனாதிபதி என்கிற ரப்பர்ஸ்டாப் பதவியில், யார் வந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை என்கிற போது, அப்பதவிக்கு நாராயணமூர்த்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்டால் மட்டும் என்ன பிரச்சனை? ஒன்று மில்லைதான்… ஆனால், அவரை முன்மொழிபவர்களும், வழிமொழிபவர்களும் அக்கருத்துக்கு ஆதரவாகச் சொல்லும் விஷயங்கள், சகிக்க முடியாதவையாகவும், பலநேரங்களில் அபத்தமாகவும் இருக்கின்றன.

*******

கற்பிதம் ஒன்று : நாராயண மூர்த்தி, சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். அவர் வந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது.

உண்மை : குடியரசுத் தலைவர் பதவிக்கு யார் வந்தாலும், ஒன்றும் கழட்டமுடியாது. கையெழுத்துக்காக ஏதாவது காகிதம் வந்தால், அதிலுள்ள விஷயம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால், காலம் தாழ்த்தலாம். அவ்வளவே.. மற்றபடி, மத்திய அரசு சொல்வதைக் கேட்டு, அதன் படி நடக்க வேண்டும்.

கற்பிதம் இரண்டு : அவர் ஒரு மிகச் சிறந்த நிர்வாகி. அவரால் இந்தியாவை ஆள முடியாதா?

உண்மை : தான் உருவாக்கிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வருபவர்களை மட்டும், நியமித்து, வேலை வாங்கி, கட்டிமேய்ப்பதற்கும், இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட கும்பலை அவ்விதமாக கட்டி மேய்ப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. தன்னுடைய சட்டதிட்டத்துக்கு ஒத்துவராதவர்களை, தன் அதிகார எல்லையில் இருந்து தூக்கி எறிய முதலாளி நாராயணமூர்த்திக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை நாட்டின் தலைவருக்குக் கொடுக்க முடியுமா?

கற்பிதம் மூன்று : அவர் ஒரு மிகச் சிறந்த பிசினஸ்மேன். சில ஆயிரங்கள் சொச்சத்தில், நிறுவனத்தைத் துவக்கி, இப்பொது பல பிலியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக ஆக்கியவர். குடியரசுத் தலைவராக வந்தால், நாடு பொருளாதார ரீதியில் முன்னேறும்.

உண்மை : பொருளாதாரக் கொள்கைகளுக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்கும் யாதொரு தொடர்புமில்லை. அவர் மிகச் சிறந்த பிசினஸ்மேனா என்பதிலேயே,எனக்குச் சந்தேகங்கள் உண்டு. அப்படியே இருந்தாலும், அது, குடியரசுத் தலைவர் தெரிவுக்கான காரணியாக இருக்க முடியாது.

கற்பிதம் நான்கு : அவர் ரொம்ப நல்லவர், நேர்மையானவர்.

உண்மை : இருக்கலாம். எனக்குத் தெரியாது.

கற்பிதம் ஐந்து : நாரயணமூர்த்திதான், இந்திய ஐடி துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இன்றைக்கு நாடே சுபிட்சமாக இருப்பது ஐடி துறையின் அசுர வளர்ச்சியால் தான். அவரை, நாட்டின் தலைவர் ஆக்கினால் தான் என்ன?

உண்மை : ஐடி துறையின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம் என்பது போன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை. அவர் ஒரு பிரைவேட் என்டர்பிரைஸின் தலைவர். தன் நிறுவனத்துக்கும், பங்குதாரர்களுக்கும் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்து, லாபம் ஈட்டினார். தன் நிறுவனத்துக்கு அப்பால், தேசிய அளவில் ஐடி துறையின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு என்ன என்பது கேள்விக்குரியது. தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு, ஐஐஎம் /ஐஐடி போன்ற உயர்பீட கல்வி நிலையங்களில், இட ஒதுக்கீடு குறித்த அவரது கருத்துக்கள், அபத்தமானவை. எல்லாமே நல்ல விஷயம் தான் என்று நேராக, மேம்போக்காக யோசிக்கும் அப்துல் கலாம் போன்றவர்களை விட, கையில் அதிகாரம் கிடைத்தால், ஜஸ்ட் லைக் தட், சரி செய்துவிடலாம் என்று நினைக்கும் நாராயணமூர்த்தி போன்றவர்கள் ஆபத்தானவர்கள். இந்தியா , இன்ஃபோசிஸ் நிறுவனம் போல ஒற்றைப்படைத் தன்மை கொண்டதல்ல.

கற்பிதம் ஆறு : நாராயணமூர்த்தி போல ஒருவர் நாட்டின் தலைவராக வந்தால், உலக அரங்கில், நம் நாட்டுக்கு மரியாதை கிடைக்கும்.

உண்மை : நல்லா வருது வாயிலே…….

பகுப்புகள்: arasiyal · bijines

SunTV Airlines

April 21, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

பத்ரியின் சமீபத்திய இடுகைக்கான எதிர்வினை

*********

பிசினஸ் லைனில் இந்தச் செய்தியைப் பார்த்ததும், ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு , நிறுவனம் கொடுத்த அறிக்கையைப் பார்த்தேன். MoA/AoA விலே சில மாற்றங்கள் செய்யப் போவதற்கு இத்தனை ஸ்பெகுலேஷனா? தேவுடா….

ஆக்சுவலி சன் டீவி அலுவலகத்திலே என்ன நடந்திருக்கும் என்று ஊகமான உரையாடல் :

மாறன் : ஆடிட்டர், நம்ம சொந்த உபயோகத்துக்கு ரெண்டு ஏர்கிராஃப்ட் வாங்க அனுமதி கிடைச்சுருக்கே.. கூட ரெண்டு வாங்கி கமர்ஷியலா ஓட்டினா என்ன?

ஆடிட்டர் : செய்யலாம் சார்…ஆனால், அதுக்கு அனுமதி வாங்கணும்… நெறைய ப்ரொசீஜர் இருக்கு…

மாறன்: அதுக்கு என்ன? முறையா எல்லாம் செஞ்சுடலாம். தியாகராஜன் (Paramount) மாதிரி தம்மாத்தூண்டு பசங்க எல்லாம் ஆபரேட் பண்றாங்க… நமக்குக் கிடைக்காதா? தம்பிக்கு ஒரு ஃபோனைப் போடு

ஆடிட்டர் : கரக்ட் சார். புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிச்சுடுவோம் சார், யார்னா வெளிநாட்டு கம்பெனி கூட டை அப் போட்டு ஒரு ஜாய்ண்ட் வெஞ்சர்.. இல்லாட்டி சொந்தமாவே ஒரு wholly owned subsidiary..

மாறன் : புது கம்பெனி எல்லாம் வேணாம்..எல்லார் கண்ணையும் உறுத்தும், சன் டிவி நிறுவனத்திலேயே ஒரு புது டிவிஷன்.. ஏர்லைன்ஸ் டிவிஷன்.

ஆடிட்டர் : (தயக்கத்துடன்).. சார் அதிலே ஒரு சின்ன சிக்கல் இருக்கு. Memorandum and Articles of Association எழுதும் போது , ஏர்லைன்ஸ் பத்தி எல்லாம் சொல்லலே, அதனாலே அதை மாத்தணும்.. அப்படி மாத்தாம நாம புதுசா எதுவும் செய்ய முடியாது.

மாறன் : சரி.. மாத்தி எழுதி, வேலையை ஆரம்பிங்க…

ஆடிட்டர் : ( அதிக தயக்கத்துடன்).. அதுக்கு முன்னாலே, ஷேர்ஹோல்டர்ஸ் கிட்டேந்து அனுமதி வாங்கணும். அப்படி அனுமதி வாங்கப் போறேன்னு ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு தகவல் தெரிவிக்கணும்…

மாறன் : என்ன மிஸ்டர் விளையாடறீங்களா? முக்காவாசி ஸ்டாக் என்கிட்டே இருக்கு… நான் எதுக்கய்யா ஷேர்ஹோல்டர் அனுமதி வாங்கணும்? அதுவுமில்லாமே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்குக்குச் சொன்னால் பத்திரிக்கைக் காரங்க எல்லாம் மோப்பம் பிடிச்சுருவானுங்களே..

ஆடிட்டர் : அதான் சார் ப்ரொசீஜர்.. வேற வழியே இல்லீங்க சார்..

மாறன் : சரி சரி என்னமோ பண்ணித் தொலைங்க..இவ்ளோ வில்லங்கம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா, காபிடல் மார்க்கெட் க்குள்ளே வந்திருக்கவே மாட்டேன்….

**********

பகுப்புகள்: bijines

Reliance – உடைந்த சாம்ராஜ்ஜியம்

ஜூன் 19, 2005 · 1 மறுமொழி

அம்பானி பற்றி ஒரே வலைப்பதிவில் சொல்லி விட முடியாது. ( சொக்கன் எழுதிய ) புதிதாக, திருத்தப் பட்ட , இரண்டாம் பதிப்பும் வந்து விட்டதாம். வாங்கிப் படித்துக் கொள்ளலாம். அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், இந்திய வர்த்தக உலகின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாளம். அவர்கள் செயல்முறைகளில், அணுகுமுறைகளில், கொள்கைகளில், பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும், துணிச்சலும், தைரியமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும் கொண்டவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ரிஸ்க் எடுப்பதிலும், புதுப்புது திட்டங்களை அமுல்படுத்துவதிலும், அவர்கள் பலருக்கு முன்னோடி. அப்படிப்பட்ட பல பில்லியன் ரூபாய்கள் மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில், சில மாதங்களாக நடந்து வந்த குழப்பம், பிரசித்தமானது.

கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த பங்காளி சண்டை, நேற்று ஓரளவுக்குச் சுபமாக முடிந்தது.

இரு வருடங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ் அதிபர் அம்பானி நோய்வாய்ப்பட்டு இறந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே, அம்பானியின் மகன்கள் இருவருக்குள்ளும் வேறுபாடு எழுந்தது. நாளாவட்டத்தில் விரிசல் பெரிதாகி, சில மாதங்களுக்கு முன்பு, பொது ஊடகங்களில் வெடித்தது.

ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள நிறுவனங்களில், அனில், மற்றும் முகேஷ் அம்பானி சகோதரர்களுக்கு எத்தனை பங்கு இருக்கிறது, நிர்வாக இயக்குனர்களில், யார், யாருடைய பக்கம் என்பது போன்ற ஈகோ மோதல்கள் ஏற்பட்டு, பெரிதாக வளர்ந்தது. திருபாய் அம்பானி உயிருடன் இருந்த நாட்களில், நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு, முகேஷ் அம்பானிக்கு அதிக அதிகாரமும், அனில் அம்பானிக்கு குறைச்சலான அதிகாரமும் அளிக்கப்பட்டு இருந்தது. அதை சாதகமாக ஆக்கிக் கொண்டு, முகேஷ் அம்பானி, தம்பிக்கு ஆதரவான ஆட்களை எல்லாம் நிர்வாக உயர் குழுவில் இருந்து ஒதுக்கி வைத்தார்.சிக்கல் பெரிதாக வளர்ந்தது. அம்பானி சகோதர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், முகம் கொடுத்துப் பேசிக் கொள்ளாமல், சூடான பத்திரிக்கை அறிக்கைகள் மூலமாகவே சந்தித்துக் கொண்டனர். பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் குழுமத்தில் இருக்கும் நிறுவனங்களின் பங்கு விலை சடசடவென்று சரிந்தது. இந்த சர்ச்சை, திருபாய் அம்பானியின் மனைவி மூலம், நேற்று ஒரு முடிவுக்கு வந்தது.

ரிலையன்ஸ் குழுமத்தில் இருக்கும் நிறுவனங்கள், அவற்றின் மொத்த மதிப்பு ஆகியவற்ற்றை நிபுணர்களின் துணை கொண்டு கணக்கெடுத்து, ஆளுக்கு சரிபாதியாக பிரித்துக் கொடுத்து விட்டார். எண்ணை சுத்திகரிப்பு, பாலிமர் ஆகியவற்றை முக்கிய வர்த்தகமாகக் கொண்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள், முகேஷ் அம்பானிக்கும், மின்சார உற்பத்தி பிசினஸாகக் கொண்ட ரிலையன்ஸ் எனர்ஜி, நிதி நிறுவனமான ரிலையன்ஸ் காபிடல், தொலைத் தொடர்பில் ஈடுபட்டிருக்கும் ரிலையன்ஸ் இன்·போகாம், ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானிக்கும் கிடைத்திருக்கின்றன.

ஒட்டு மொத்த மதிப்பை வைத்துப் பார்த்தால், அனிலுக்குக் குறைவாகவும், முகேஷ¤க்கு அதிகமாகவும் கிடைத்திருக்கிறது என்றாலும், அனில் இதை வைத்து ஏதும் பிரச்சனையைக் கிளப்பாதது, நல்ல விஷயம். ஆனால், தன்னுடைய திறமையால், முகேஷ் அம்பானியை விட, அனில் நன்றாகச் செயல்பட்டு, பங்குதாரர்களுக்கு நல்ல இலாபம் ஈட்டித் தருவார் என்று நம்ப இடம் இருக்கிறது. மேலும், முகேஷ் அம்பானியின் வசம் இருக்கும் flagship நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாலிமர் உற்பத்தியிலும், எண்ணை சுத்திகரிப்பிலும் முன்னணியில் இருக்கும் நிறுவனம். நன்றாக காலூன்றிய நிறுவனம். என்றாலும், manufacturing sector என்ற வகையைச் சார்ந்தது. அந்த நிறுவனத்தின் உற்பத்திப் பெருக்கமும், சந்தைத் தேவையும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால், அம்பானி வசம் இருக்கும் ரிலையன்ஸ் எனர்ஜி என்ற நிறுவனம், அடிப்படை உள்கட்டமைப்பு வகையைச் சார்ந்தது. அதிலும் இப்போதுதான் சந்தையில் இடத்தைப் பிடிக்கத் துவங்கி இருகிறார்கள். அவர்களுடைய திட்டங்களும் ( projects ) பல்வேறு விதமான தருவாய்களில் இருக்கின்றன. இந்த நிலையில் இருக்கும் நிறுவனத்தை திறமையாக நடத்த, முகேஷை விடவும் அனில் அம்பானி சரியான தேர்வு என்பது என் சொந்த அபிப்ராயம். அனில் அம்பானிக்கு வந்து சேர்ந்திருக்கும் இன்னொரு நிறுவனமான ரிலையன்ஸ் இன்·போகாமும், டெலிகாம் சர்வீஸஸ் என்ற வகையைச் சார்ந்தது. இந்த துறைக்கு இருக்கும் வாய்ப்புக்கள் மிக மிக அதிகம். இதற்கும் அனில் தான் ஏற்றவர்.

இப்பொதைக்கு முகேஷ் அம்பானி பக்கம், தராசு சாய்ந்தது போல இருந்தாலும், அனில் தான் கடைசியில் ஜெயிக்கப் போகிறார் என்று நினைக்கிறேன்.

மீடியாக்களில், அப்பா சொத்துக்கு பிள்ளைகள் அடித்துக் கொள்கிறார்கள் என்கிற மாதிரி எல்லாம் செய்திகள் வந்தன. ( குறிப்பாக தமிழ் நாளிதழ்களில் ). அது உண்மை அல்ல. இந்த நிறுவனத்தை, திருபாய் அம்பானி தோற்றுவித்திருந்தாலும், ரிலையன்ஸ் குழுமத்தை, அப்பாவும் இரு மகன்களுமாகத்தான் உழைத்து கட்டிக் காப்பாற்றினார்கள்.யாருடைய திறமையால் அந்தக் குழுமம் இத்தனை தூரம் வளர்ந்தது என்பதை இது வரை சரியாகக் கணித்துச் சொல்லி விடமுடியாது.

இனி பங்கு மார்க்கெட்டும், ஆண்டறிக்கையும் சொல்லி விடும். அனிலா முகேஷா , யார் திறமைசாலி என்று..

பகுப்புகள்: bijines