
வாசித்ததும் மனசு கனத்துப் போனது என்று சொன்னால் அது க்ளிஷே ஆகப் பார்க்கப் படுமோ என்று தோன்றுகிறது.
கணிப்பொறி அறிவியலில் இளநிலைப் பட்டமும், மொழியியல் பாடத்தில் முதுகலையும் படித்துவிட்டு, நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், தன்னுடைய ஆண் என்கிற அடையாளத்தைத் துறக்க மேற் கொண்ட முயற்சிகளையும், துறந்த பின்னர் சமூகம் அவரை எதிர் கொண்ட முறைகளையும், சந்தித்த வன்முறைகளையும், நிராகரிப்புகளையும் உள்ளடக்கி எழுதியிருக்கும் இந்த தொகுப்பு, தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்.
வித்யாவின் வலைப்பதிவைத் தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும், அவரது பிறப்பு வளர்ப்பு தொடங்கி தற்போதைய வாழ்க்கை வரையிலான சம்பவங்களின் தொகுப்பை ஒட்டு மொத்தமாக வாசித்ததில் ஏற்பட்ட உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் கிடைக்க மறுக்கிறது.
சந்தேகாஸ்பதமான வினோதத்தலைப்புகள் கொண்ட ஏராளமான புத்தகங்கள் வெளியிட்டு வரும் கிழக்கு, பார்த்த உடனே வாங்கிப் படிக்கத் தூண்டும் அளவுக்கு இந்நூலைக் கொண்டு வந்ததற்காக நன்றி.
வித்யாவை வலைப்பதிவு உலகத்துக்கு இழுத்து வந்து, இது போன்றதொரு நூல் வெளிவரக் காரணமாக இருந்த பாலபாரதிக்கு நன்றி.
ரயிலில் செல்லும் போதோ, அல்லது வேறு எங்காவதோ திருநங்கைகள் வம்பு செய்வதைப் பார்த்தால், அது அவர்களுடைய தற்காப்புக்காகத்தான் என்பது இனி எனக்குப் புரியும். இந்த நூலை வாசித்தால் , உங்களுக்கும்.