Prakash’s Chronicle 2.0

குடும்பம், திருமணம், வன்முறை இத்தியாதி

ஜனவரி 19, 2008 · 5 மறுமொழிகள்

எழுதுகிற மூடில் இல்லை என்றாலும், சிறகின் குரல் கேட்டதும், எழுதத் தோன்றியது.

திருமணம் என்கிற அமைப்பு, பெண்களைப் பொறுத்த வரை ஒரு தலைப்பட்சமானது என்பதைத் தெரிந்து கொள்ள சமூகவியிலே முனைவர் பட்டமோ , நிறைஞர் பட்டமோ ( நன்றி : காயத்ரி) பெற்றிருக்கத் தேவையில்லை. நடைமுறை வாழ்க்கையில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

திருமணமாகாத இள வயதினர், குழந்தைகள் , ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்று வகை வகையாக பாட்டுப் போட்டி வைத்து ஷோ காட்டிய பிறகு, தொலைக்காட்சிகளின் பார்வை, ஹவுஸ்வைஃப் என்று அப்பொழுது, ஹோம் மேக்கர் என்று இப்போதும் அழைக்கப்படும், இல்லத்தரசிகள் பக்கம் திரும்பியிருக்கிறது.

இதயதெய்வம் தோன்றுகிற ஒரே தொலைகாட்சி நிகழ்ச்சி என்பதால் தவறாமல் பார்த்து வரும், ‘ என்னோடு பாட்டு பாடுங்கள்’ என்ற ஜெயா தொலைக்காட்சி பாட்டுப் போட்டித் தொடர், இளசுகளை வைத்து போட்டி நடத்தி பரிசு கொடுத்து, அடுத்த சீசனுக்கு ( இது ஒரு புது ஜார்கன்) , திருமணமான , முப்பத்தைந்து வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் போட்டி நடத்துகிறது.

தொடர்ந்து கவனித்து வந்தால், கலந்து கொள்கிற பெண்களின் பின்புலம் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது என்பதை உணரலாம்.

‘ என் பெயர் <ஏதோ ஒரு பெயர்> . நான் <ஹவுஸ் ஒய்ஃப் அல்லது ஹோம்மேக்கர்> ஆக இருக்கிறேன். கல்யாணம் ஆகி <ஐந்தில் இருந்து பத்துக்குள் ஏதோ ஒரு எண்> வருஷம் ஆச்சு. <ஐந்தில் இருந்து பத்துக்குள் ஏதோ ஒரு எண்> வயசிலேந்து <ஏதோ ஒரு மாம்பலம் மாமி அல்லது மைலாப்பூர் மாமா பெயர்>கிட்ட இசை கத்துகிட்டேன். அரங்கேற்றம் செஞ்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு டச் விட்டுப் போச்சு.’

‘ நல்லா பாடறீங்க, ஆனா சுருதி கொஞ்சம் பாத்துக்கங்க’ என்று எஸ்பிபி மனசு நோகாதபடி சொல்லும் பொழுதோ, அல்லது ‘ இன்னும் கொஞ்சம் ப்ரெத் கன்ட்ரோல் வேணும்மா’ என்று சொல்லும் பொழுதோ, அந்தப் பெண்ணின் முகத்தில் தென்படும், ஏமாற்றம், தர்மசங்கடம், மன்னிப்புக் கேட்கிற பாவனை எல்லாம் சேர்ந்த கலவையான உணர்வு சொல்ல வருகிற செய்தியைப் புரிந்து கொள்வது சிரமம்.

இன்டர் காலேஜ் கல்சுரல்ஸில் பட்டை கிளப்பின தினங்களையும், வாங்கிக் குவித்த கோப்பைகளையும், ‘ ப்ளீஸ், ஒரே ஒரு பாட்டு பாடும்மா’ என்று எல்லோரையும் கெஞ்ச விட்ட நவராத்திரி நாட்களையும், தெருப் பசங்களையெல்லாம் சுத்தலில் விட்ட பாவாடைத் தாவணிப் பருவங்களையும் நினைத்துப் பார்த்து எழுந்த நாஸ்டால்ஜியா கலந்த துக்கத்தை, எஸ்பிபியை கிட்ட வைத்துப் பார்த்துப் பேசிய சந்தோஷத்துடன் சமன் செய்து தூங்கப் போயிருப்பார் என்று நினைக்கிறேன்.

திருமணம் என்பது ஒரு ( வேறு வழி இல்லாமல் புரிகிற ) வன்முறை என்று யாரோ ( யார்?) சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

யாராக இருந்தாலும், அவருக்கு ஒரு ராயல் சல்யூட் ( அது புடிக்கலைன்னா, பேக்பைப்பர் கோல்ட்)

பகுப்புகள்: pulambals · thAikkulam

5 பதில்கள் இது வரை ↓

  • Suresh - penathal // ஜனவரி 20, 2008 இல் 3:46 மு.பகல் | பதில்

    பிரகாஷ்,

    மனோபாலா பேசுவது இன்னுமே அநியாயத்தின் உச்சம். “நீங்க பாடினதைவிட, உங்களுக்கு உதவியா இருந்த குடும்பத்தினர், அனுமதி கொடுத்த கணவர் – இவங்களுக்குத்தான் அதிக்மா நன்றி சொல்லணும் இல்லையா?”

    “ஒரு கூட்டுக்குள்ளே இருந்துட்டு இன்னிக்கு ஒருநாள் சுதந்திரமா வந்ததைப் பத்தி என்ன பீல் பண்றீங்கம்மா?”

    “அடுப்படி சமையல்னு இருந்துட்டு இன்னிக்கு பாட்டுப் பாட வந்திருக்கீங்களே, அதைப்பத்தி ஒரு வார்த்தை?”

  • bashakavithaigal // ஜனவரி 20, 2008 இல் 4:24 பிற்பகல் | பதில்

    அடிமைத்தனத்தை பெண்கள் ஏன் ஏற்றுகொள்கிறார்களோ???????

  • kalyanakamala // ஜனவரி 21, 2008 இல் 5:52 மு.பகல் | பதில்

    ஆணாதிக்கத்தை ஆண்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்களோ அப்ப‌டியே நாங்கள் பெண் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளவைக்கப் பட்டோம். எல்லாம் உங்கள் நன்மைக்காகத்தான். கணவன் பிள்ளைகளில் எங்களைக் கண்டோம். நீங்கள் எங்களில் உங்களைக் காணவில்லை.
    வருத்ததுடன் கமலா

  • kalyanakamala // ஜனவரி 21, 2008 இல் 5:55 மு.பகல் | பதில்

    //ஏதோ ஒரு மாம்பலம் மாமி அல்லது மைலாப்பூர் மாமா பெயர்>//

    எவ்வளவு அறியாமை? அவர்கள் இசையில் தேர்ந்திருப்பது என்பது அவ்வளவு அறியாமையா? அலட்சியமா?
    கமலா

  • Mahesh // ஜனவரி 23, 2008 இல் 11:14 மு.பகல் | பதில்

    http://thatstamil.oneindia.in/movies/specials/2008/01/sujathas-anandha-dhandavam-230108.html

கருத்துத் தெரிவிக்கவும்