Prakash’s Chronicle 2.0

Sivaji – Sureshkannan

Posted by: Prakash on: ஏப்ரல் 10, 2007

சுரேஷ் கண்ணனின் இடுகைக்கு எழுதிய மறுமொழி நீண்டுவிட்டதால், தனிப் பதிவாக இங்கே….

************

ஆஃப்டரால், ஒரு படத்திற்குப் போய் ஏன் இத்தனை பரபரப்பு என்கிற உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால் அதற்கு நீங்கள் காரணங்களாகச் சொல்லி இருப்பதும், சிவாஜி படத்தின் வெற்றி ஏற்படுத்தக் கூடியதாகச் சொல்லும் பின் விளைவுகளும் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை.

மகேந்திரன், பாலுமகேந்திராவின் படங்கள், நல்ல படங்கள் தான், ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவை *மட்டுமே*, நம் மக்களின் ரசனையை உய்விக்க வந்தவை என்று கட்டம் கட்டுவதை ஏற்க முடியவில்லை.

பொதுவில் வைக்கப்படும் கலைவடிவங்கள் எல்லாமே, மக்களின் ரசனை, தெரிவு ஆகியவற்றை கொண்டுதான் அமைகின்றன. நாட்டுக் கலைகள் தொடங்கி, புராண நாடகங்கள், தெருக்கூத்து, சமூக நாடகங்கள், மணிப்பிரவாள
நடையில் உரையாடல் அமைந்த 1947க்கு முன்பான படங்கள், இளங்கோவன், கலைஞர் வசனமெழுதிய ஐம்பதுகளில் வந்த படங்கள், பின்பு ஸ்ரீதர் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் வகைப் படங்கள், மாடர்ன் தியேட்டர்ஸாரின் ஜேம்சுபாண்டு படங்கள், அழகியலை மய்யப்படுத்தி வந்த *பொற்காலப் படங்கள்*, நியூவேவ் படங்கள், மசாலாப் படங்கள் என்று தற்போதைய செல்வராகவன் படங்கள் வரை, உற்று நோக்கினால் ஒரு வித
பேட்டர்னைக் கண்டு கொள்ள முடியும். அவை, பொழுது போக்கு அம்சைத்தை முக்கியமாகக் கொண்டு அந்த அந்த காலகட்டத்துக்கு ரிலெவெண்டாக அமைந்தன.

எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்களில் இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பிற்கும், நிழல்களுக்கும், அப்படங்களின் செய்நேர்த்தி தவிர்த்து , வேறு என்ன பயன் மதிப்பு, வேலை செய்ய ஆட்கள் போதாமல் இருக்கும் இந்த காலகட்டத்தில் இருக்க முடியும்? ‘ பொண்ணு கர்வமா இருக்கலாம், கர்ப்பமாகத்தான் இருக்கக் கூடாது’ என்று, அவள் ஒரு தொடர்கதை கவிதா இப்போது பேசினால், பெண்ணியவாதிகள் எல்லாம் செருப்பால் அடிப்பார்கள். இதே கவிதாவைத்தான், எழுபதுகளில், ‘மாடேர்ன் பெண்மணி’ என்று ஊடகங்கள் சித்திரித்தன.

என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஆக்கங்களை, அது வெளிவந்த காலகட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டாகவேண்டும், கட்டுடைக்கிறேன் என்று, டார் டாராகக் கிழிக்க முற்பட்டாலும் கூட..

கலை வடிவங்கள் அனைத்துமே மக்களுக்காகத்தான், பண், இசை, ஆட்டம், கொண்டாட்டம் என்று ‘சவுண்டாக’ இருக்கும் நம் மக்களின் கலைவடிவங்கள், அதை ஓட்டித்தான் இருக்கும். உயர்மட்ட ரசனை என்ற பெயரிலே, அவர்களிடம், நீங்கள் குறிப்பிடுகிற பொற்காலப் படங்களைத் திணிப்பது போன்ற அராஜகம் ஏதுமில்லை.

பொற்காலப் படங்கள் எனக்குப் பிடிக்குமா இல்லையா என்பது வேறு விஷயம். பிடித்திருந்தாலும், அதுதான் பொது
ரசனையாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு ரொம்பவே யோசிப்பேன். உதாரணமாக, மன்மத ராசா பாடல் பட்டி தொட்டியெங்கும் ஏன் ஒலித்தது என்று நீங்கள் வியப்படையலாம். ஆனால், அது தான் நம் இயல்பு என்று நான் சொல்வேன்.

மேலும், பொற்காலம், இருண்ட காலம் எல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொள்கிற கற்பனைதான். அழியாத கோலங்களும், உதிரிப்பூக்களும், ஒரு சாராரின் தேவையைப் பூர்த்தி செய்தது என்றால், சகலகலா வல்லவனும் முரட்டுக் காளையும் மற்றொரு சாராரின் தேவையைப் பூர்த்தி செய்தன. இதிலே ஏவி.எம், எடுத்த திரைப்படங்கள் எல்லாம் மோசம், என்று டிஸ்கிரிமினேட் செய்வது எந்த வகையிலே? to each his own… அவ்ளோதான்.

எண்பதுகளின் துவக்கத்திலே, மக்கள் ஏன் ஏவிஎம் எடுத்த மசாலாப் படங்கள் மீது ஒட்டு மொத்தமாகச் சாய்ந்தார்கள் என்பதை, அப்போது இருந்த அரசியல் , சமூகச் சூழலை கணக்கில் கொண்டு, சமூக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயமே – செய்வதற்கு ஆளில்லை என்பது வேறு விஷயம் – தவிர, ஜஸ்ட் லைக் தட், முரட்டுக் காளையும் சகலகலா வல்லவனும், தமிழ்த் திரைப்பட ரசனையைக் கெடுத்து விட்டன என்று பொத்தாம் பொதுவாகக் குற்றம் சொல்ல முடியாது.

இப்ப நீங்க கேட்ட ஆதாரமான கேள்விக்கு வருகிறேன். ஆமாம், சிவாஜிக்கு ஏன் இத்தனை பரபரப்பு? சந்திரமுகி வசூல் செய்த கோடிகளால்… சரி, சந்திரமுகிக்கு ஏன் இத்தனை பரபரப்பு இல்ல? அதற்கு முன்பு வந்த பாபா தோல்வி அடைந்ததால்.

சினிமா என்று அல்ல… கோடிக்கணக்கில் பணம் புரளும் எல்லா வர்த்தகங்களும் இதே போலத் தான். எல்லா வணிக நாளிதழ்களிலும், தினமும் ஒரு முறையாவது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் புகைப்படத்தைப் பார்க்க முடிகிறதே ஏன்? இன்று அவர்தான் ஸ்டார்…. …அவருக்கு சுண்டு விரலில் சுளுக்கு என்றால், சென்செக்ஸ் புள்ளி சரிகிறதே ஏன்? வெற்றி கரமாக நடக்கும் வர்த்தகங்கள் தான், மீடியாவின் விளம்பரப் பசிக்கு தீனி அளிக்க முடியும். இது ப்யூர் பிசினஸ்…. இன்றைக்கு நாம் இருப்பது மீடியா கட்டியாளும் பொருளாதாரத்தில் தான்… சிவாஜி படம் ஓடினால், ஒரு ஆறு மாசத்துக்கு மீடியாவுக்குத் தீனி கிடைக்கும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் , ஏவி.எம்மும் நன்றாகச் சம்பாதிப்பார்கள். அவ்வளவுதான். இப்போது இருக்கிற சினிமாவின் தரம்/ரசனை, ஏறவும் செய்யாது, இறங்கவும் செய்யாது.

4 பதில்கள் -க்கு "Sivaji – Sureshkannan"

சுரேஷின் ஆதங்கம் வேறான தளத்தில் வைத்து பேச வேண்டியது. சரியாக சொன்னா ஒரு விஷயம் நாம் இப்போது ஊடக பொருளாதாரத்தில் (Media Economics) இருக்கிறோம். இங்கே எல்லாமே Conversational Marketing வகையறா தான். இன்றைக்கு சிவாஜி, நாளைக்கு தசாவாதாரம், நாளைனைக்கு வேறு ஏதாவது. நாளைக்கு சிம்புவிற்கு கல்யாணமென்றால் தமிழ் ஊடகங்கள் அதைப்பற்றி தான் எழுதும்.

இங்கே எல்லாமே ‘வியாபாரி’ கதைதான். துட்டு மாமே துட்டு கேடகரி,.

அத விடுங்க தல, ஏதாவது ஸ்பெஷல் நியுஸ் போடுங்க சிவாஜி பத்தி ;)

மறுமொழி இடுக

TwitterCounter for @icarusprakash

அண்மைய மறுமொழிகள்

SnapJudge மேல் Movies, a meme
WA மேல் Movies, a meme
கற்றதும் பெற்றதும் ஹ… மேல் மிக்சர் – II
WA மேல் Movies, a meme
செந்தழல் ரவி மேல் சங்கச் சித்திரங்கள்- ஜெயம…

RSS Latest From Gilli

  • ஒரு பிழை நடந்துள்ளது; செய்தி ஓடை செயற்படவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் முயற்சிக்கவும்.

Subscribe

c

Blog Stats

  • 54,837 hits